இந்தோனீசியாவைச் சேர்ந்த முன்னாள் பணிப்பெண் பார்தி லியானி விசாரணையில் குறைபாடு இருந்ததாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் ஒப்புக் கொண்டுள்ளார்.
போலிசார் விரைவாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
அந்தப் பணிப்பெண் வழக்கில் தொடர்புடைய லியூ மன் லியோங்கும் அவருடைய புதல்வரும் அளித்த புகாருக்கும் சம்பவ இடத்திற்கு போலிஸ் அதிகாரிகள் சென்றதற்கும் ஐந்து வார இடைவெளி இருந்தது.
இது சட்டபூர்வமான தேவை நிபந்தனையையும் போலிஸ் நெறிமுறையையும் மீறிய ஒரு செயலாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
போலிசில் 2016 அக்டோபர் 30ஆம் தேதி புகார் தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து விரைவாக சம்பவ இடத்திற்கு போலிசார் சென்றிருக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
ஒரு குற்றச்செயல் நிகழும் இடத்திற்கு போலிஸ் அதிகாரிகள் குறித்த நேரம் தவறாமல் அல்லது கூடுமானவரையில் விரைவாக போகவேண்டும் என்பது சட்டத்தின்படி தேவையான ஒன்று என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தைப் பொறுத்த வரை போலிஸ் அதிகாரிகள் லியூவின் வீட்டிற்கு 2016 டிசம்பர் 3ஆம் தேதிதான் சென்றனர்.
இந்தக் குறைபாட்டிற்கு சாக்குபோக்கு எதுவும் கூற முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டு உள்ள அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் துறை ரீதியான புலன்விசாரணை நடந்து வருவதாகவும் தேவைப்படும் பட்சத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் திரு சண்முகம் கூறினார்.
இந்தக் குறைபாட்டுக்குக் காரணம் என்ன என்பதைத் தெரிவிக்கும்படி தான் கேட்டதாகவும் புலன்விசாரணை அதிகாரி, நேரம் இல்லாத அளவிற்கு இதர பல பணிகளில் ஈடுபட்டு இருந்ததாக தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
போலிஸ் புலன்விசாரணை அதிகாரிகள் பணிச்சுமையை மறுபரிசீலனை செய்யும்படி தான் கேட்டுக் கொண்டு இருப்பதாகக் குறிப்பிட்ட திரு சண்முகம், இது மனிதவள பிரச்சினை என்பதால் இதற்கு எளிதில் தீர்வு இராது என்பதை ஒப்புக்கொண்டார்.
குமாரி பார்தி லியானியை விடுவிப்பது என்று உயர்நீதிமன்றம் முடிவு செய்தது.
திருட்டு நிகழ்ந்த வீட்டிற்கு போலிஸ் அதிகாரிகள் தாமதமாகச் சென்றது, உயர்நீதிமன்றம் அவ்வாறு முடிவு எடுத்ததற்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது.
குற்றச்செயல் தொடர்பான சம்பவங்களைப் பற்றி புலன்விசாரணை நடத்தும்போது எப்போதுமே பொருட்களை போலிஸ் கைப்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் அவர் விளக்கினார்.
அப்படி பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றவில்லை என்றாலும் அவற்றைப் புகைப்படம் எடுப்பது போன்ற காரியங்கள் மூலம் சாட்சியங்களுக்கு முறையான ஆதாரங்களைப் பெறவேண்டும்.
இந்தப் பணிப்பெண் விவகாரத்தைப் பொறுத்தவரை போலிஸ் புகாரைத் தொடர்ந்து மிகவும் கவனமாக எடுக்கப்பட்ட புகைப் படங்கள் போதிய இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
என்றாலும் அப்படி செய்யப்படவில்லை என்று அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.