பிரிட்டிஷ் தொழில்நுட்ப நிறுவனமான டைசன் சிங்கப்பூரில் ஒரு புதிய நவீன தயாரிப்பு மையத்தை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது.
சிங்கப்பூர், பிரிட்டன், பிலிப்பீன்ஸ் ஆகிய மூன்று நாடுகளில் மொத்தம் 2.75 பில்லியன் பவுண்டை (S$4.9 பி.) அந்நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, சிங்கப்பூரில் புதிய தயாரிப்பு மையத்தை அமைப்பதற்கான திட்டம் இடம்பெறுகிறது.
இந்த முதலீடுகள் டைசன் தயாரிப்புகளை இரட்டிப்பாக்கும் என்றும் 2025ஆம் ஆண்டிற்குள் அது புதிய துறைகளில் அடியெடுத்து வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், மென்பொருள், ‘மெஷின் லேனிங்’, எந்திரனியல் போன்ற துறைகளில் கூடுதல் பொறியாளர்கள் வேலைக்கு எடுக்கப்படுவர் என்றும் அந்நிறுவனம் ஓர் அறிக்கை வழியாக நேற்று தெரிவித்தது.
அடுத்த தலைமுறை மோட்டார் தொழில்நுட்பம், இணைப்புத்திறன், பொருள் அறிவியல் போன்ற துறைகளில் ஆய்வுப் பணிகளுக்காக டைசன் நிறுவனம் வளங்களை ஒதுக்கி வருகிறது.
தனது திண்ம நிலை மின்கலத் தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியது. இப்போது, சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் அந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்போதைய மின்கலங்களைக் காட்டிலும் தூய, செயல்திறன்மிக்க எரிசக்திச் சேமிப்பை அந்தத் தொழில்நுட்பம் வழங்கும் எனக் கூறப்படுகிறது.
செயின்ட் ஜேம்ஸ் எரிசக்தி நிலையத்தில் அமையும் டைசன் நிறுவனத்தின் புதிய அனைத்துலகத் தலைமை அலுவலகம் 2021ஆம் ஆண்டில் திறக்கப்பட இருக்கிறது. அதனுடன், ஆய்வு, உருவாக்க வசதிகள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் ‘மெஷின் லேனிங்’, எந்திரனியல் போன்ற துறைகளுக்கான புதிய ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் டைசன் நிறுவனம் 300 பொறியாளர்கள், அறிவியல் வல்லுநர்கள் உட்பட ஏறக்குறைய 1,200 பணியாளர்களைக் கொண்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இவ்வாண்டில்பணியமர்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அமையவுள்ள புதிய நவீன தயாரிப்பு மையம், தனது பல்வேறு வசதிகளை ஒருங்கிணைத்து, அத்துறையில் தொழில்நுட்பப் புத்தாக்கத்தை முடுக்கிவிடும் என்று டைசன் நிறுவனம் கூறியிருக்கிறது.
பொருள் உருவாக்கத்தில் முனைப்பு காட்டும் விதமாக ஒரு புதிய பல்கலைக்கழக ஆய்வுத் திட்டத்தை நிறுவவும் அந்நிறுவனம் நோக்கம் கொண்டுள்ளது.
இப்போதைக்கு, ஆக்ஸ்ஃபர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், லண்டன் இம்பீரியல் கல்லூரி போன்ற பிரிட்டிஷ் கல்வி நிலையங்களுடன் கூடிய நீண்டகாலத் திட்டங்கள் உட்பட மொத்தம் 22 பல்கலைக்கழக ஆய்வுத் திட்டங்களை அந்நிறுவனம் கொண்டுள்ளது.
இதற்கிடையே, புதிய தொழில்நுட்பங்கள், தயாரிப்புகளில் புத்தாக்கத்தை ஊக்குவிக்க, பிரிட்டனில் உயர்நிலை எந்திரனியல் ஆய்வு, செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் டைசன் நிறுவனம் தனது கடப்பாட்டை வலுப்படுத்தி வருகிறது.
அத்துடன், புதிய இயந்திரங்கள் உருவாக்கத்தை முடுக்கிவிடுவதற்காக பிலிப்பீன்சின் அலபாங்கில் ஒரு பிரத்தியேக மென்பொருள் மையத்தை அது அமைத்து வருகிறது.
இப்போது பிலிப்பீன்சின் கலம்பாவில் அமைந்துள்ள டைசன் நிறுவனத்தின் நவீன தயாரிப்பு மையத்தின் மூலம் ஓராண்டிற்கு 13 மில்லியன் மின்னிலக்க மோட்டார்கள் தயாரிக்கப்படுகின்றன.
டைசன் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு இந்த மூன்று நாடுகளில் செய்யப்படும் முதலீடுகளும் விரிவாக்கப் பணிகளும் ஒரு முக்கிய படியாக அமையும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோலண்ட் குரூகர் தெரிவித்தார்.
“டைசன் வாடிக்கையாளர்கள் பலனடையும் விதமாக எங்களது தயாரிப்புகளின் செயல்திறனையும் நிலைத்தன்மையையும் முடுக்கிவிடும் வகையில் எரிசக்திச் சேமிப்பு, எந்திரனியல், மென்பொருள் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய இதுவே தருணம்,” என்று திரு குரூகர் கூறினார்.