புலம்பெயர்ந்தோர் வசிப்பதற்கு அதிக செலவாகும் உலக நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் 14வது இடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் நாணய மதிப்பு பலவீனமடைந்ததன் காரணமாக இவ்வாண்டு சிங்கப்பூர் இரு இடங்கள் இறங்கியது.
டென்மார்க்கின் கோபன்ஹேகனும் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரமும் சிங்கப்பூரை முந்தியதாக இசிஏ இண்டர்நேஷனல் எனப்படும் மனிதவள ஆலோசனை நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்தது.
பட்டியலின் முதல் இடத்தில் ஹாங்காங் தொடர்ந்து நீடிக்கிறது. தோக்கியோவும் நியூயார்க்கும் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளன.
நிச்சயமற்ற அரசியல் நிலவரம் நீடித்ததன் காரணமாக ஹாங்காங்கில் வீட்டு வாடகை வீழ்ச்சியடைந்து. இருந்தபோதிலும் புலம்பெயர்ந்தோருக்கான செலவுமிக்க நகரமாகவே ஹாங்காங் நீடிப்பதாக அந்த அறிக்கை சுட்டியது.
சிங்கப்பூரின் இடம் இறங்கியதற்கான காரணத்தை இசிஏ இண்டர்நேஷனலின் ஆசியாவுக்கான இயக்குநர் திரு லீ குவேன் விளக்கினார்.
“கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாக ஏற்பட்ட உலக நெருக்கடி சிங்கப்பூர் பொருளியலுக்குக் கைகொடுக்கக்கூடிய வர்த்தகம் வீழ்ச்சியடைய காரணமாக அமைந்தது. இதனால் வலுவான டென்மார்க், சுவிட்சர்லாந்து நாணயங்களைக் காட்டிலும் சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு பலவீனமடைந்தது,” என்றார் அவர்.
இருப்பினும், ஆசிய அளவில் சிங்கப்பூர் இவ்வாண்டும் 6வது இடத்தைப் பிடித்துள்ளது.
“உலகளவிலும் ஆசிய அளவிலும் பட்டியலின் முதல் இடத்தில் இருக்கும் ஹாங்காங்கில் வீட்டு விலைகள் அதிகம்.
“புலம்பெயர்ந்தோருக்கு அதிக செலவுமிக்க நகராக இது விளங்க இதுவும் ஒரு காரணம்.” என்றார் திரு குவேன்.
உலகின் செலவுமிக்க நகரங்களின் முதல் பத்து இடங்களில் சிங்கப்பூரோடு சேர்த்து நான்கு ஆசிய நகரங்கள் உள்ளன. அவை, தோக்கியோ 2வது இடம், சிங்கப்பூர் 6வது இடம், சோல் 8வது இடம், யோகோஹமா 10வது இடம்.
புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கு ஆகும் செலவு மளிகைச் சாமான்கள், ஓய்வு நடவடிக்கைகள் போன்ற பயனீட்டாளர் அனுபவிக்கும் பொருள், சேவைகளின் அடிப்படையில் தரவரிசை கணக்கிடப்படுகிறது.
கொவிட்-19 கொள்ளைநோய் சூழல் தாய்லாந்திலும் வியட்னாமிலும் உள்ள நகரங்களையும் விட்டு வைக்கவில்லை.
இவ்வாண்டு இவற்றின் ஒவ்வொரு நகரமும் குறைந்தபட்சம் 10 இடங்கள் இறங்கியதாக ஆய்வறிக்கை தெரிவித்தது.