13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன 19 வயது மாணவியை ஆடவர் ஒருவர் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
லசால் கலைக் கல்லூரி மாணவியான குமாரி ஃபெலிஷியா டியோ வெய் லிங்கைக் கொன்றதாக 35 வயது அகமது டேனியல் முகம்மது ரஃபாயீ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமகது டேனியல் நேற்று காணொளி மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி அதிகாலை 1.39 மணிக்கும் 7.20 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் புளோக் 19 மெரின் டேரசின் 10வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் குமாரி டியோவை அகமது டேனியல் கொன்றதாக நம்பப்படுகிறது.
அவருக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்டபோது அகமது டேனியல் சலனமின்றி இருந்தார்.
32 வயது ரகில் புத்ரா செடியா சுக்மராஜனாவுடன் சேர்ந்த குமாரி டியோவை அகமது டேனியல் கொன்றதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகமது டேனியலை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்ததாக போலிசார் தெரிவித்தனர்.
ரகில் புத்ரா செடியாவை போலிசார் தேடி வருகின்றனர். அவர் சிங்கப்பூரில் இல்லை என்று நம்பப்படுகிறது.
குமாரி டியோவின் உடலையும் போலிசார் தேடுகின்றனர்.
குமாரி டியோவைக் காணவில்லை என்று 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் தேதியன்று அவரது தாயார் போலிசில் புகார் செய்யப்படுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்களும் குமாரி டியோவும் நண்பர்கள் என நம்பப்படுகிறது,
2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் மெரின் டெரசில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடத்தின் மின்தூக்கிக்குள் நுழையும்போது குமாரி டியோ ஆகக் கடைசியாக உயிருடன் காணப்பட்டார்.
ஆனால் 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி அதிகாலை நேரத்தில் குமாரி டியோ அந்தக் கட்டடத்தின் 10வது மாடியில் உள்ள வீட்டைவிட்டு சென்றதாக ஆடவர்கள் இருவரும் தெரிவித்திருந்தனர். குமாரி டியோ மாயமானது தொடர்பாக போலிசார் தீவிர விசாரணை நடத்தியும் குற்றம் நிகழ்ந்திருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.
சம்பந்தபட்ட வீட்டுக்கு அருகில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆராய்ந்தும் பலனில்லாமல் போனது.
குமாரி டியோ காணாமல் போனதாக வழக்கு பதிவானது. அவர் காணாமல் போனதற்கும் அந்த இரு ஆடவர்களுக்கும் எவ்வித தொடர்பையும் போலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
தீர்க்கப்படாத இத்தகைய வழக்குகளை அடிக்கடி மறுஆய்வு செய்வது வழக்கம் என்று தெரிவித்த போலிசார், அப்போது குமாரி டியோவின் குடும்பத்தார், சாட்சிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறினர்.
குமாரி டியோவின் வங்கிக் கணக்குகள், மின்னஞ்சல்கள், சமூக ஊடகத்தளங்கள் ஆகியவை அண்மையில் பயன்படுத்தப்
பட்டனவா என்பதைக் கண்டறிய சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் திருப்புமுனை ஏற்பட்டது. குமாரி டியோ காணாமல் போனபோது அவர் தமது கைபேசியையும் மடிக்
கணினியையும் வைத்திருந்தார் என்று விசாரணையில் தெரியவந்தது. அவற்றில் ஒன்று 35 வயது அகமது டேனியலிடம் இருப்பதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கிற்குத் தீர்வு காண கடுமையாக உழைத்த அதிகாரி
களுக்கு மத்திய புலனாய்வுத் துறை இயக்குநர் மூத்த உதவி ஆணையர் ஹாவ் குவாங் ஹுவீ பாராட்டு தெரிவித்தார்.
2007ஆம் ஆண்டில் குமாரி டியோ காணாமல் போனதை அடுத்து அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் பல இடங்களில் தேடினர். குமாரி டியோவின் படத்தைக் கொண்ட ஆயிரக்கணக்கான துண்டுபிரசுரங்களை அவர்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
அகமது டேனியல் இம்மாதம் 24ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.