கொரோனா கிருமிக்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிக்கும் பிரதான மருந்தாக்க நிறுவனங்களுடன் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
அதன் தொடர்பில் அந்தத் தடுப்பூசிகளை இந்த வட்டாரத்தில் விநியோகிப்பதில் பங்களிக்க முடியும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
“தடுப்பூசி தயாரிப்பில் சிங்கப்பூர் பங்களிக்காமல் இருந்திருக்கலாம்,” என்ற திரு சான், “அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், தடுப்பூசி தயாரிப்பிலும் அதன் விநியோகத்திலும் சிங்கப்பூரின் உத்தேச பங்களிப்பை எதிர்பார்க்கலாமா,” என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தார்.
“தடுப்பூசி தயாரிப்பு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடந்துகொண்டிருக்கும் வேளையில், அந்தத் தயாரிப்புத் திட்டத்தின் இறுதிக்கட்டப் பணியான விநியோகத்தில் சிங்கப்பூர் உதவ முடியும்.
அந்தத் தயாரிப்புப் பணியில் பொட்டலம் போடுவதிலும் சிங்கப்பூர் பங்களிக்க முடியும். அந்தப் பணியை சிங்கப்பூரிலிருந்தபடியே செய்ய முடியும். அதன் பிறகு தடுப்பூசிகளை இந்த வட்டார நாடுகளுக்கு விநியோகிக்கும் பணியை மேற்கொள்ள முடியும்,” என்றும் அமைச்சர் விவரித்தார்.
ஏ*ஸ்டார் எனப்படும் அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுக் கழகத்துக்கு நேற்று மேற்கொண்ட வருகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு சான், ‘ஏ*ஸ்டார்’ அமைப்பும் மாற்றுப் புரதச் சத்து நிறுவனமான ‘பெர்ஃபெக்ட் டே’யும் இணைந்து அமைக்கவிருக்கும் புதிய ஆய்வு, மேம்பாட்டுக் கூடம் பற்றி அறிவித்தார்.
தடுப்பூசி விநியோகம் பற்றி பேசுகையில், கடந்த வாரம் தாம் ‘ஃபெட்எக்ஸ்’ எனும் பெரிய தளவாட நிறுவனத்துக்குச் சென்றதாகவும் தடுப்பூசி விநியோகம் தொடர்பில் அந்நிறுவனம் கொண்டுள்ள பெரிய அளவிலான செயலாக்கம் மற்றும் ஆற்றல் வெளிப்பாடுகளைக் கண்டறிந்ததாகவும் திரு சான் விளக்கினார்.
“தடுப்பூசி விநியோகம் தொடர்பிலான ஆற்றல் சிங்கப்பூரிடம் இருக்கிறது. தடுப்பூசிகளை சிங்கப்பூருக்கு கொண்டு வருவதில் மட்டுமல்லாது, தேவை ஏற்பட்டால், அவற்றை இந்த வட்டார நாடுகளுக்கு விநியோகிக்க, நாம் கடந்த பல ஆண்டுகளாக வளர்த்துக்கொண்டுள்ள ஆற்றல்களைப் பயன்படுத்தி செயல்படுத்த முடியும்,” என்றும் அமைச்சர் சான் நம்பிக்கை தெரிவித்தார்.