ராஃபிள்ஸ் சிட்டி கடைத்தொகுதியில் செயல்பட்டு வரும் ராபின்சன்ஸ் பகுதிவாரிக் கடை இம்மாதம் 10ஆம் தேதிக்குள் நிரந்தரமாக மூடப்படும். இதன் மூலம் அதன் 162 ஆண்டுகால வரலாறு ஒரு முடிவுக்கு வருகிறது.
ராபின்சன்ஸ் கடை செயல்படும் கடைசி நாள் அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்கு மேல் தள்ளிப்போகாது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறிய கலைப்பாளர் ‘கோர்டாமெந்தா’, அந்தக் கடையில் இருப்பு இருப்பதைப் பொறுத்து அது முன்னதாகவே மூடப்படலாம் என்றது.
“எஞ்சிய பொருள்களுக்கான விலைச் சலுகைகள் தினந்தோறும் புதுப்பிக்கப்படும். அடுக்குகளில் இருந்து பொருட்களைக் காலியாக்குவதே நோக்கம்,” என்று நேற்று ‘கோர்டாமெந்தா’ கூறியது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு நேற்று பிற்பகல் ராபின்சன்ஸ் கடைக்குச் சென்று அங்கு நிலவரத்தைப் பார்வையிட்டது. அக்கடையின் மூன்று தளங்களிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. குறிப்பாக துணிமணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மூன்றாவது தளத்தில் மட்டும் ஏறக்குறைய 100 வாடிக்கையாளர்கள் காணப்பட்டனர்.
சில அடுக்குகள் ஏற்கெனவே காலியாகிவிட்டன. மற்ற சில அடுக்குகளில் ஒப்பனைப் பொருள்கள், கைப்பைகள், காலணிகள், ஆடவருக்கான துணிமணிகள் போன்றவை அடுக்கப்பட்டு இருந்தன.
ஐந்து அல்லது அதற்கு அதிகமான பொருட்களை வாங்கினால், அவற்றில் குறைந்த மதிப்புடைய பொருளில் 80 விழுக்காடு விலைக் கழிவு வழங்கப்பட்டது.
இங்குள்ள தனது கடைசி இரு கடைகளை மூடவிருப்பதாக ராபின்சன்ஸ் கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி அறிவித்து இருந்தது. மாறிவரும் வாடிக்கையாளர் விருப்பம், வாடகைச் செலவு போன்ற பலதரப்பட்ட காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அது அப்போது விளக்கி இருந்தது.
இந்நிலையில், ராஃபிள்ஸ் சிட்டி ராபின்சன்ஸ் கடை ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு அவர்களது கடைசி வேலை நாள் இம்மாதம் 10ஆம் தேதியாக இருக்கும். கணக்குகளை மூடுவது உள்ளிட்ட மற்ற சில பணிகளுக்கு உதவ ஒரு சில ஊழியர்கள் குறுகியகாலத்திற்குத் தொடர்ந்து பணியில் இருப்பர் என்று ‘கோர்டாமெந்தா’ கூறியது.இம்மாதம் 10ஆம் தேதி வரை அக்கடை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.