சிங்கப்பூரில் இன்று (ஜனவரி 7) நண்பகல் நிலவரப்படி புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து இதுவரை சிங்கப்பூரில் 58,813 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
இன்று சமூகத்தில் 2 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. மற்ற 31 பேரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவர்களில் 7 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்; 12 பேர் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள்.
இங்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 24 வயது கொரிய ஆடவர் சாங்கி விமான நிலையத்தின் கிரவுன் பிளாசாவில் உள்ள அஸுர் உணவகத்தில் பணிபுரிகிறார். வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் இவருக்கு பி117 வகையிலான அதிகமாகப் பரவும் திறன் கொண்ட கிருமித்தொற்று இல்லை என்று முதற்கட்ட பரிசோதனைகள் தெரிவித்தன.
விமான சிப்பந்திகளுக்கும் ஹோட்டல் விருந்தினர்களுக்கும் பொட்டலமிடப்பட்ட உணவை அவர் விநியோகித்தார் என்றும் உணவகத்துக்கு வந்தவர்களுடன் அவர் கலந்துறவாடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கமாகச் செய்யப்படும் அட்டவணைப்படுத்தப்பட்ட பரிசோதனைகளில் கடந்த சனிக்கிழமை அவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. திங்கட்கிழமை அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதே நாளில் அவருக்கு தொற்று அறிகுறிகளும் தென்பட்டன.
நேற்று உள்ளூர் சமூகத்தில் வேலை அனுமதிச் சீட்டுடன் பணிபுரியும் பிலிப்பீன்ஸ் நாட்டவருக்கும் கிருமித்தொற்று பதிவானது. அவர் பிலிப்பீன்சிலிருந்து கடந்த மாதம் 4ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தார். 31 வயதான அவர், டிசம்பர் 18 வரை தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். கடந்த மாதம் முதல் தேதி, 14ஆம் தேதிகளில் எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு கிருமித்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் அவர், இன்னும் பணியைத் தொடங்கவில்லை.
வேலையில் சேருவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு முன்பே தொற்று இருந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மற்ற 29 பேரில் ஒருவர் சிங்கப்பூரர், இருவர் நிரந்தரவாசிகள், ஒருவர் சார்ந்திருப்போர் அட்டையில் இருப்போர். மற்றவர்களில் 21 பேர் வேலை அனுமதி அட்டையுடன் ஒருவர் சிறப்பு அனுமதியிலும் மூவர் குறுகியகால அனுமதியிலும் இங்கு வந்தவர்கள்.
இவர்கள் பிரிட்டன், இந்தியா, இந்தோனீசியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு வந்தவர்கள்.
பிளாசா சிங்கப்பூரா, மரினா பே சேண்ட்ஸ், ஜங்ஷன் 8, ஃபூட் பாரடைஸ் @ என்டியு கேன்டீன் 2 ஆகிய இடங்களுக்கு கிருமித்தொற்று கண்டவர்கள் சென்றதாக அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
அனைத்துலக அளவில் இதுவரை 87.1 மில்லியனுக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1.88 மில்லியன் மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.