தீவு விரைவுச்சாலையில் இன்று காலை லாரியும் பேருந்தும் விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயம் அடைந்தனர்.
விபத்தின் காரணமாக காலை உச்சக்கட்ட வேளையில் அங்கு மிக மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
துவாஸ் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையின் ஜாலான் பாஹார் நுழைவாயிலுக்கு அருகில் விபத்து நிகழ்ந்ததாக காலை 8 மணி அளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
விபத்தில் காயமடைந்த 12 பேரும் இங் தெங் ஃபோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
மருத்துவமனைக்குச் செல்லும்போது 75 வயது லாரி ஓட்டுநரும் லாரியில் பயணம் செய்துகொண்டிருந்த 11 ஊழியர்களும் சுயநினைவுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
காயமுற்ற பயணிகள் 22லிருந்து 39 வயதுக்கு உட்பட்டவர்கள்.
விபத்து குறித்து போலிசார் விசாரணை நடத்துகின்றனர்.
லாரியும் பேருந்தும் மோதிக்கொண்டதில் லாரியில் இருந்த ஊழியர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தததாக அவர்களில் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
சில ஊழியர்களுக்கு இலேசான வெட்டுக் காயங்களும் கீறல்களும் ஏற்பட்டதாகவும் சிலருக்கு சிராய்ப்புகளும் உடல் வலியும் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
காயமுற்ற ஊழியர்கள் ஒன்பது பேர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றனர்.
அவர்களில் ஒருவருக்கு கையில் கட்டு போடப்பட்டிருந்தது.
விபத்துக்குள்ளான பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பேருந்து ஓட்டுநர் தெரிவித்தார்.