வெளிநாட்டு ஊழியர்கள், வசதிகுறைந்தோர் ஆகியோருக்கு இதுவரை $1 மில்லியனுக்கு மேல் மதிப்புடைய ‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்’ பற்றுச்சீட்டுகள் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட $1 மில்லியன் மதிப்பில் சிங்கப்பூர் ராட்டினத்திற்கு வெளிநாட்டு ஊழியர்கள் செல்ல, 27,000க்கும் மேற்பட்ட நுழைவுச்சீட்டுகளை, ‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்’ பற்றுச்சீட்டு வடிவில் மக்கள் நன்கொடை வழங்கியுள்ளதாக லாப நோக்கமற்ற அமைப்பான ‘இட்ஸ்ரேனிங்ரேன்கோட்ஸ்’ தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கிய இந்நன்கொடைத் திட்டம் வழி 5,600க்கும் மேலான வெளிநாட்டு ஊழியர்கள் பலனடைந்துள்ளனர்.
வெறும் 2,000 நுழைவுச்சீட்டுகளை இலக்காகக் கொண்டிருந்த அமைப்பின் நிறுவனர் திருவாட்டி தீபா சுவாமிநாதன், மக்களிடமிருந்து கிடைத்த உதவி பெருமளவில் அமைந்ததாகக் கூறி நன்றி தெரிவித்தார்.
இதேபோல் சுற்றுலா வர்த்தகங்களும் பற்றுச்சீட்டைப் பயன்படுத்தக்கூடிய இணையத்தளங்களும் வசதிகுறைந்த பிரிவினருக்கு உதவ, பொதுமக்களிடையே பற்றுச்சீட்டு நன்கொடை பெறும் திட்டங்கள் சிலவற்றைத் தொடங்கியுள்ளன. சிறுவர் இல்லவாசிகள், வசதிகுறைந்த குடும்பங்கள் ஆகியோர் இவற்றின் மூலம் பலன் அடைந்து வருகின்றனர்.