கொவிட்-19 தடுப்பூசியால் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக பொஃப்மா எனப்படும் இணையம்வழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித்திறனுக்கும் எதிரான சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பதிவுக்கு திருத்த உத்தரவைப் பிறப்பிக்குமாறு பொஃப்மா அலுவலகத்துக்கு சுகாதார அமைச்சர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, கோ மெங் செங்கின் மக்கள் சக்தி கட்சி மற்றும் சத்து சிங்கப்பூரா ஃபேஸ்புக் பக்கங்களுக்கும் சிங்கப்பூர் 'அன்சென்சர்ட்' இணையப்பக்கத்துக்கும் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மருத்துவர் ஒருவருக்கு கொவிட்-19 தடுப்பூசி பக்கவாதத்தை விளைவித்திருப்பதாக அல்லது பக்கவாதம் ஏற்பட பெரும் அளவில் பங்களித்ததாக கோ மெங் செங்கின் மக்கள் சக்தி கட்சி மற்றும் சத்து சிங்கப்பூரா ஃபேஸ்புக் பக்கங்களில் இம்மாதம் 2ஆம் தேதியன்று பதிவு செய்யப்பட்டது.
கொவிட்-19 தடுப்பூசி 81 வயது ஆடவருக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக 7ஆம் தேதியன்று அதே ஃபேஸ்புக் பக்கங்களில் தெரிவிக்கப்பட்டது. அதே நாளில் அதே செய்தியை சிங்கப்பூர் 'அன்சென்சர்ட்' இணையப்பக்கம் பதிவேற்றம் செய்தது. அந்தச் செய்தியை அது தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துகொண்டது.
"இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. சிங்கப்பூரால் அங்கீகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்படும் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி மற்றும் மொடர்னா தடுப்பூசியால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை," என்று சுகாதார அமைச்சு கூறியது.
மருத்துவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதற்கு கொவிட்-19 தடுப்பூசி காரணமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இம்மாதம் 4ஆம் தேதியன்று மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை விளக்கமளித்ததாகவும் அமைச்சு கூறியது.
ஃபேஸ்புக் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 81 வயது முதியவரின் மரணத்துக்கு இதய நோய் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் அமல்படுத்தப்பட்டுள்ள பொய்ச்செய்திகளுக்கு எதிரான சட்டத்தின்கீழ், திருத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் இணையப்பக்கங்கள் அவற்றின் பதிவுகளுக்குப் பக்கத்தில் திருத்தத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பிறப்பிக்கப்பட்ட திருத்த உத்தரவுக்கு திரு கோவும் சிங்கப்பூர் 'அன்சென்சர்ட்' இணையப்
பக்கத்தை நிர்வகிப்பவரும் கட்டுப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பிறகு இதுதான் முதல்
முறையாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள முதல் திருத்த உத்தரவு.