மேலும் சில மாணவர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்படலாம் என்றபோதும், இங்குள்ள பள்ளிகளின் வழியே கிருமி பரவியதற்கான சான்றுகள் எதும் இதுவரை இல்லை.
கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங், கொவிட்-19 அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் நேற்று தெரிவித்தார்.
இதுவரை கிருமித்தொற்று உறுதியான மாணவர்களுக்குப் பள்ளிக்கு வெளியே தொற்று ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னெச்செரிக்கையாக, பள்ளி களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
"பள்ளிகளில் உள்ள சூழ்நிலையை அணுக்கமாக கவனித்து, தேவைப்பட்டால் கூடுதல் நடவடிக்கைகளை எடுப்போம்," என்று திரு வோங் தெரிவித்தார்.
பள்ளிகளுக்குச் சென்று வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, விழிப்புடன் இருக்கும்படி பள்ளி முதல்வர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நினைவூட்டப்பட்டுள்ளதாக திரு வோங் சொன்னார்.
அண்மையில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் பெரும்பாலானவர்களுக்கு, தனியார் துணைப்பாடப் பள்ளியில் உள்ள ஒரு துணைப்பாட ஆசிரியருடன் தொடர்பு இருந்ததாக சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைகள் துறையின் இயக்குநர் கென்னத் மாக் கூறினார்.
மாணவர்கள், தனிமைப்படுத்தப் பட்டிருந்தபோது, அவர்களுக்கு கிருமித்தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக இணைப் பேராசிரியர் மாக் கூறினார்.
கிருமி தொற்றிய துணைப்பாட ஆசிரியர் பற்றி சுகாதார அமைச்சு கடந்த வியாழக்கிழமை இரவு மேல்விவரங்களை அளித்தது.
அந்த 50 வயது சிங்கப்பூர் மாது, 'லர்னிங் பாயிண்ட்' எனும் தனியார் துணைப்பாடப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். மே 3ம் தேதி அவருக்கு கொவிட்-19 அறிகுறிகள் தென்பட்டன. மே 11ம் தேதி அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு மறுநாள் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
துணைப்பாட ஆசிரியர் முகக் கவசத்துக்குப் பதில் முகக்காப்பு அணிந்திருந்தாரா என்ற கேள்விக்கு, முகக்கவசம் அணிவது தொடர்பிலான விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்று இணைப் பேராசிரியர் மாக் பதில் அளித்தார்.
முன்னதாக பள்ளிவகுப்புகளில் முகக்காப்புகளை அணிய அனுமதிக்கப்பட்டது. இனி முகக்கவசங்களை அணிவது வலுவாக ஊக்குவிக்கப்படும் என்றார் அவர்.
பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானோர் முகக்கவசங்கள்தான் அணிகின்றனர். ஆனாலும் பள்ளிகளில் முகக்கவசத்துக்கு பதில் முகக்காப்பு பயன்படுத்தப்படாது என்ற கொள்கை எல்லா பள்ளிகளிலும் நடப்புக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.