வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மறுவிற்பனை வீடு விலை கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து 11வது மாதமாக மே மாதம் 1.2 விழுக்காடு கூடியது.
என்றாலும், கொவிட்-19 கடும் கட்டுப்பாடுகள் காரணமாக கைமாறிய வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. கொவிட்-19 கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக வீடுகளை நேரே பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் குறைவாக இருந்தன.
விற்கப்பட்ட வீடுகள் குறைவாக இருந்ததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். எஸ்ஆர்எக்ஸ் என்ற நிலச்சொத்து இணையவாசலின் புதிய புள்ளிவிவரங்கள் முலம் இந்த நிலவரங்கள் தெரிய வருகின்றன.
மே மாதம் மொத்தம் 1,966 மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன. ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் இது 16 விழுக்காடு குறைவு என்பது குறிப் பிடத்தக்கது.
என்றாலும் மே மாதம் இடம்பெற்ற வீவக மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 440.1 விழுக்காடு அதிகம்.
சென்ற மாத விலை அதிகரிப்பு பரந்த அடிப்படையில் இருந்தது. முதிர்ச்சி அடைந்த, முதிர்ச்சி அடையாத பேட்டைகளிலும் விலை உயர்வு இருந்தது.
எல்லா வகை வீடுகளும் அதிக விலைக்குக் கைமாறின. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் சென்ற ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விலை 12 விழுக்காடு அதிகரித்தது.
சென்ற மாதத்தில் 13 மறுவிற்பனை வீடுகள் தலா $1 மில்லியனுக்கும் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டன.
இவற்றையும் சேர்த்து பார்க்கையில் இந்த ஆண்டில் முதல் ஐந்து மாதங்களில் விற்கப்பட்ட இத்தகைய $1 மில்லியனுக்கும் அதிக விலையுள்ள வீடுகளின் எண்ணிக்கை 87 ஆக இருந்தது.
2020 ஆண்டு முழுவதிலும் கைமாறிய இத்தகைய வீடுகள் 82 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் இந்த ஆண்டு மே 31 நிலவரப்படி, 389 வீடுகள் தலா $1 மில்லியனுக்கும் அதிக விலைக்கு விற்கப்பட்டன. இந்த மாதம் அதற்குள்ளாக இத்தகைய ஒரு வீடு விற்கப்பட்டுள்ளது. பூன் கெங் ரோட்டில் இருக்கும் 93 சதுர மீட்டர் நாலறை வீடு $1,008,000க்கு விலை போனது.
கடந்த 12 மாத காலத்தில் மாதாமாதம் சராசரியாக $13 மில்லியன் மதிப்புள்ள கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆரஞ்ச் டீ & டை என்ற நிறுவனத்தின் பகுப்பாய்வுத் துறை மூத்த துணை தலைவர் திருவாட்டி கிறிஸ்டின் சுன் கூறினார்.
மே மாதம் விலை 1.2% அதிகரித்தது; ஆனால் கைமாறிய வீடுகள் எண்ணிக்கை குறைவு