சிங்கப்பூரில் சீன ஆடவர் ஒருவர் கலப்பினத் தம்பதியிடம் இனவாதக் கருத்துகளைக் கூறுவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வந்தது.
சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் இன்று (ஜூன் 6) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் அந்தக் காணொளி குறித்து தமது கருத்துகளைப் பகிர்ந்தார்.
இந்தச் சம்பவம் குறித்த முழு விவரங்கள் தம்மிடம் இல்லை என்றாலும், மற்றவர்களிடம் நேரடியாக இனவாதக் கருத்துகள் கூறுவதை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று என கூடுதலானோர் நினைப்பதாகத் தெரிகிறது என்றார் அமைச்சர் சண்முகம்.
இந்தச் சம்பவத்தை “ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல”, “மிகவும் கவலையளிக்கிறது” என்று வர்ணித்தார் அவர். இன சகிப்புத்தன்மை, நல்லிணக்கம் என வரும்போது சிங்கப்பூர் சரியான திசையில் சென்றுகொண்டு இருந்ததாக தாம் நம்பியிருந்ததாக திரு சண்முகம் கூறினார். ஆனால் அண்மைய நிகழ்வுகளைக் கருத்தில் கொள்ளும்போது, தமக்கு இனிமேல் அதில் “அவ்வளவு உறுதியாக இல்லை” என்று அவர் சொன்னார்.
ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் இந்தக் காணொளியை ஃபேஸ்புக் பயனாளர் தேவ் பர்காஷ், 23, என்பவர் பகிர்ந்தார்.
அந்தக் காணொளியில், சிங்கப்பூரரான சீன ஆடவர் ஒருவர், “சீனப் பெண் ஒருவரை வேட்டையாடியதாக” திரு பர்காஷ் மீது குறைகூறினார். அந்தக் காணொளியை திரு பர்காஷின் காதலி எடுத்ததாகத் தெரிகிறது.
இந்திய ஆடவர் ஒருவருடன் சீனப் பெண் இருக்கக்கூடாது என்றும் அந்த சீன ஆடவர் கூறினார்.
தாம் பாதி இந்தியர், பாதி பிலிப்பினோ என்றும் தமது காதலி சீன, தாய்லாந்து கலப்பினத்தவர் என்றும் அந்தக் காணொளியில் திரு பர்காஷ் தெளிவுபடுத்தினார்.
இதன் தொடர்பில் இன்று (ஜூன் 6) காலை அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “நாங்கள் இருவரும் கலப்பினத்தவர்கள். ஆனால், சிங்கப்பூரர்களாக இருப்பதற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்,” என்றார்.
“ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே” காதலிக்க வேண்டும் என அந்த ஆடவர் தங்களிடம் சொன்னதாக திரு பர்காஷ் கூறினார்.
“அந்த ஆடவர் தம்மை ஓர் இனவாதி என்று அழைத்தார். நாங்கள் வேறு இனத்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எங்களை இனவாதி என்றும் அவர் குறைகூறினார்,” என்றார் திரு பர்காஷ்.
“காதலுக்கு இனம் கிடையாது, காதலுக்கு சமயம் கிடையாது. நீங்களும் நானும் யாரை காதலிக்க விரும்புகிறோமோ அவரைக் காதலிக்க முடிய வேண்டும். காணொளியில் உள்ள இந்த ஆடவரைப் போன்று நாம் ஆகிவிடக்கூடாது.
“இந்தக் காணொளியை அந்த ஆடவர் காண நேரிட்டால், நீங்கள் ஓர் இனவாதியாக இருப்பதை நிறுத்திக்கொள்ள கற்றுக்கொண்டு நம் அனைவரையும் நல்லிணக்கத்துடன் வாழவிடுவீர் என நம்புகிறேன்,” என்று திரு பர்காஷ் தமது பதிவில் விவரித்தார்.