தனிநபர் நடமாட்ட சாதனங்களில் மின்சாரக் கோளாறு ஏற்படுவதால் அவை தீப்பிடிப்பதற்கு பல நேரங்களில் காரணமாய் இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் கடந்த வியாழக்கிழமை மின்தூக்கிக்குள் தனிநபர் நடமாட்டச் சாதனம் தீப்பிடித்துக் கொண்டதைத் தொடர்ந்து 20 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
தனிநபர் நடமாட்டச் சாதனங்களில் நம்பகத்தன்மை இல்லாத ‘லித்தியம் அயோன்’ பேட்டரிகளை அல்லது பொருத்தமற்ற மின்னூட்டியைப் பயன்படுத்துவது, சாதனங்களில் அளவுக்கு அதிகமாக மின்சாரம் ஏற்றுவது போன்றவற்றால் பேட்டரிகள் பழுதடைந்து மின்சாரக் கோளாறு ஏற்படலாம் என்று கூறப்பட்டது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இயந்திரப் பொறியியல் துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் பழனி பாலய்யா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் அதனைக் கூறினார்.
தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பாதுகாப்புத் தரத்துக்கு ஏற்ப இல்லாவிட்டாலும் அவை தீப்பிடித்துக்கொள்ளலாம்.
அச்சாதனங்களை வைத்திருக்க கட்டயாம் UL2272 சான்றிதழ் பெறவேண்டும். 2019ல் அச்சான்றிதழ் இல்லாத சாதனங்கள் சம்மந்தப்பட்டிருந்த 102 தீச்சம்பபவங்கள் ஏற்பட்டன. ஒப்புநோக்க, 2018ல் அதில் பாதி அளவாக, 52 தீச்சம்பவங்கள் ஏற்பட்டன.
தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பிலான சில விபத்துகளும் தீச்சம்பவங்களும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நடைபாதைகளில் மின்ஸ்கூட்டர்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.
அதற்குப் பிறகு இங்குள்ள மின்ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த தீச்சம்பவம் மின்ததூக்கிக்குள் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று வருணித்தார் இணைப் பேராசிரியர் பழனி.
“உயிரிழந்த ஆடவருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டதுடன், பேட்டரியில் இருந்து வெளியான நச்சுவாயுக்களும் அவரைப் பாதித்திருக்கும்,” என்றார் அவர்.