சிங்கப்பூரில் இனவாதம் இன்னமும் உள்ளது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே, சீன ஆடவர் ஒருவர் தம்மிடமும் தமது காதலியிடமும் இனவாதக் கருத்துகள் கூறியதைக் காட்டும் காணொளியைத் தாம் ஃபேஸ்புக்கில் வெளியிட்டதாக திரு டேவ் பர்காஷ் என்பவர் கூறியுள்ளார்.
ஃபேஸ்புக்கில் அவர் நேற்று (ஜூன் 6) காலை வெளியிட்ட காணொளி இதுவரை 16,000க்கும் மேற்பட்ட முறை பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது. இந்தக் காணொளி இவ்வளவு வேகமாகப் பரவும் என்பதை தாம் எதிர்பார்க்கவில்லை என்று திரு பர்காஷ் கூறினார்.
சிங்கப்பூரரான சீன ஆடவர் ஒருவர், “சீனப் பெண் ஒருவரை குறிவைத்து ஈர்ப்பதாக” கூறியதோடு மற்ற இனவாதக் கருத்துகளையும் திரு பர்காஷிடம் கூறியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதற்குப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் இன்று (ஜூன் 7) பேசிய திரு பர்காஷ், 26, அந்தச் சம்பவம் தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் இணையவாசிகள் தமக்கு அளித்த ஆதரவால் மனநிறைவு அடைந்துள்ளதாகக் கூறினார்.
தங்களது சார்பில் சிலர் போலிசில் புகார் அளித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையே, 60 வயது ஆடவர் ஒருவரிடம் விசாரணை நடந்து வருவதாக நேற்று (ஜூன் 6) போலிசார் கூறியிருந்தனர்.
அந்த ஆடவர் பலதுறைத் தொழிற்கல்லூரி ஒன்றின் விரிவுரையாளர் என நம்பப்படுகிறது.
ஐஸ்கிரீம் கடை நடத்தி வரும் திரு பர்காஷ், “நிலவரம் மாறிவரும் இன்றைய நவீன உலகில் மக்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
இதற்கு முன்பும் தமது காதலியுடன் வெளியே சென்றபோது தாம் இனவாதச் சம்பவங்களைச் சந்தித்திருந்ததாக அவர் சொன்னார். எனினும், இந்தச் சம்பவம் குறிப்பாக தமக்கு அவமானம் அளித்துள்ளதாக அவர் சொன்னார்.
திரு பர்காஷ், இந்திய-பிலிப்பினோ கலப்பினத்தவர். அவரது காதலி பாதி சிங்கப்பூர் சீனர், பாதி தாய்லாந்து இனத்தவர்.
“இந்தச் சம்பவத்தின் மூலம் சிங்கப்பூரர் என்பதற்கு அர்த்தம் தெரிய வரும். உயர்ந்த இனம் என்பது எதுவும் இல்லை என்பதை மக்களுக்கு நாம் போதிக்க வேண்டும். நாமே மற்ற இனத்தவர்களை குறைவாக மதிப்பிடக்கூடாது. நாம் பல இன சமுதாயத்தில் வாழ்கிறோம்,” என்று திரு பர்காஷ் மேலும் கூறினார்.