சிங்கப்பூரில் சீன ஆடவர் ஒருவர், கலப்பினத் தம்பதியிடம் இனவாதக் கருத்துகளைக் கூறுவதைக் காட்டும் காணொளி (படம்) ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.
அச்சம்பவம் தொடர்பான முழு உண்மையையும் தாம் அறிந்திருக்கவில்லை என்றும் ஆனாலும் மற்றவர்களின் முகத்திற்கு நேராக இனவாதக் கருத்துகளைக் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது எனப் பலரும் நினைப்பதாகத் தோன்றுகிறது என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளார்.
அச்சம்பவம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்றும் திரு சண்முகம் கூறி உள்ளார்.
இன சகிப்புத்தன்மை, நல்லிணக்கம் என வரும்போது சிங்கப்பூர் சரியான திசையில் சென்றுகொண்டு இருந்ததாகத் தாம் நம்பி வந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஆனால், அண்மைய நிகழ்வுகளை அடுத்து, இனிமேலும் அதில் தாம் 'அவ்வளவு உறுதியாக இருக்க முடியாதுபோல் இருக்கிறது' என்று குறிப்பிட்டார்.
ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் அக்காணொளியை டேவ் பர்காஷ், 23, எனும் ஃபேஸ்புக் பயனாளர் பகிர்ந்து கொண்டார்.
அக்காணொளியில், சிங்கப்பூரரான அந்த சீன ஆடவர், "சீனப் பெண் ஒருவரை வேட்டையாடியதாக" திரு பர்காஷ் மீது குறைகூறினார். அக்காணொளியை திரு பர்காஷின் காதலி எடுத்ததாகத் தெரிகிறது.
இந்திய ஆடவர் ஒருவருடன் சீனப் பெண் ஒருவர் இருக்கக்கூடாது என்றும் அந்தச் சீன ஆடவர் கூறினார்.
தாம் இந்திய-பிலிப்பினோ கலப்பினத்தவர் என்றும் அதுபோல் தம் காதலி பாதி சிங்கப்பூர் சீனர், பாதி தாய்லாந்து இனத்தவர் என்றும் திரு பர்காஷ் அந்த ஆடவரிடம் தெளிவுபடுத்தினார்.
சம்பவம் தொடர்பில் நேற்றுக் காலை திரு பர்காஷ் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், "நாங்கள் இருவரும் கலப்பினத்தவர்கள். ஆனால், சிங்கப்பூரர்களாக இருப்பதில் பெருமைகொள்கிறோம்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
'ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே காதலிக்க வேண்டும்' என்று அந்த ஆடவர் தங்களிடம் சொன்னதாக திரு பர்காஷ் கூறினார்.
"அந்த ஆடவர் என்னை ஓர் இனவாதி என்று அழைத்தார். நாங்கள் வேறு இனத்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எங்களை இனவாதி என்று அவர் குறைகூறினார்," என்றார் திரு பர்காஷ்.
"காதலுக்கு இனம் இல்லை, சமயமும் இல்லை. நீங்களும் நானும் யாரைக் காதலிக்க விரும்புகிறோமோ அவரைக் காதலிக்க முடிய வேண்டும். காணொளியில் உள்ள இந்த ஆடவரைப் போன்று நாம் ஆகிவிடக்கூடாது.
"இந்தக் காணொளியை அந்த ஆடவர் காண நேரிட்டால், அவர் ஓர் இனவாதியாக இருப்பதை நிறுத்திக்கொள்ளக் கற்றுக்கொண்டு, நம் அனைவரையும் நல்லிணக்கத்துடன் வாழவிடுவார் என நம்புகிறேன்," என்றும் திரு பர்காஷ் தமது பதிவில் கூறியுள்ளார்.