உணவு, பானக் கடைகளில் இப்போது அதிகபட்சம் இருவர் மட்டுமே குழுவாகச் சேர்ந்து உண்ண அனுமதிக்கப்படும் நிலையில், அவ்வரம்பு ஜூலை மாத நடுப்பகுதியில் இருந்து ஐவராக உயர்த்தப்படும்.
கொவிட்-19 தடுப்பூசி நடவடிக்கையும் தொற்று அபாயம் அதிகமுள்ள பணியிடங்களில் அவ்வப்போதைய கட்டாயப் பரிசோதனையும் முடுக்கிவிடப்பட இருப்பதை அடுத்து, இந்த வரம்பு அதிகரிப்பு இடம்பெறும் என்று நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார்.
"திட்டமிட்டபடி தடுப்பூசி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாலும் தொற்று அபாயம் அதிகமுள்ள இடங்களில் பணிபுரிவோர்க்கான அவ்வப்போதைய கொரோனா பரிசோதனையாலும் அந்த நிலையை நாம் அடைய வேண்டும்," என்று நேற்றைய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின்போது திரு வோங் கூறினார்.
எந்தத் தேதியில் இருந்து அது தொடங்கும் என்பது குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
கடுமையான கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக உணவு, பானக் கடைகளில் அமர்ந்து உண்ணத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையில் இருந்து அதிகபட்சம் இருவர் கொண்ட குழுவாக உணவு, பானக் கடைகளில் அமர்ந்து உண்ண அனுமதிக்கப்பட்டு வருகிறது.
ஜூலை நடுப்பகுதியில் இருந்து உணவு, பானக் கடைகள், உடற்பயிற்சிக்கூடங்கள், உடற்தகுதி நிலையங்கள் போன்ற தொற்று அபாயம் அதிகமுள்ள சூழல்களில் பணிபுரிவோர் அவ்வப்போது விரைவான, எளிதான பரிசோதனை (எஃப்இடி) செய்துகொள்ள வேண்டும்.