அமெரிக்காவில் தடுப்பூசி போடப்பட்ட 13 வயது சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 200,000 பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி இயக்கத்தைத் தள்ளி வைக்குமாறு இங்குள்ள சில மருத்துவர்களும் இதயநோய் நிபுணர்களும் கொவிட்-19 தடுப்பூசி நிபுணர் குழுவிடம் முறையீடு செய்துள்ளனர்.
மிச்சிகனில் உள்ள சாகினாவ் கவுண்டியைச் சேர்ந்த அச்சிறுவன், இரண்டாவது தடுப்பூசி போடப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு இறந்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் சென்ற வியாழக்கிழமை கூறின. எனினும், சிறுவனுக்குப் போட்டப்பட்ட தடுப்பூசி குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
தடுப்பூசிக்கும் சிறுவனின் மரணத்திற்கும் தொடர்பு உள்ளதா என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் (சிடிசி) விசாரித்து வருவதாக சாகினாவ் கவுண்டி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் பெஞ்சமின் ஓங்கிற்கு இதயநோய் நிபுணர் டாக்டர் கோ குவாங் போ கடந்த சனிக்கிழமை தமது ஃபேஸ்புக்கில் திறந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
சிடிசியும் உலகெங்கிலும் உள்ள பிற நிறுவனங்களும் இந்த சம்பவம் தொடர்பாக மிகவும் வலுவான, உறுதியான தரவுகளைத் தரும் வரையில் சிங்கப்பூரின் தடுப்பூசி இயக்கத்தை சிறிது காலத்துக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
"இதில் சமயோசிதமாக சிந்தித்து இளையர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளால் ஏற்படக்கூடிய அபாயகரமான விளைவுகள் குறித்து விசாரிக்கவும் உயர் தரமான தரவுகளை வழங்க அமைப்புகளுக்கு அதிக நேரம் கொடுக்க முடியுமா?" என்று அக்கடிதம் கேட்டுக்கொண்டது.
இக்கடிதத்தில், டாக்டர் கோவுடன் மேலும் பல மருத்துவர்களும் இதயநோய் சிகிச்சை நிபுணர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
கடிதத்தில் உள்ள பரிந்துரைகளை பரிசீலிக்கப்படுமா என்று சுகாதார அமைச்சிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டபோது, தடுப்பூசி திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சு பதிலளித்தது.