மருத்துவ சேவைகள் இயக்குநர்
கென்னத் மாக் கருத்து
கேடிவி கொவிட்-19 தொற்றுக் குழுமம் உருவானதற்கு சமூகப் பரவல் காரணமாக இருக்கக்
கூடும் என்று சிங்கப்பூரின் மருத்துவ சேவைகள் இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்தள்ளார்.
தொடக்கத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட வியட்னாமியப் பெண் இந்தத் தொற்றுக் குழுமத்தில் முதன்முதலாகப் பாதிக்கப்பட்டவர் இல்லை என்று கருதப்படலாம் என்று நேற்று அவர் கூறினார். எந்த வகையில் இந்தக் குழுமம் உருவானது என்பது இன்னும் தெரியாத நிலையில் உள்ளது என்றார் திரு மாக்.
இதற்கிடையே, கேடிவி தொற்றுக் குழுமத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நேற்று 120ஐ தொட்ட நிலையில் அந்தப் பெண் இன்னும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொடர்பான அமைச்சுகள் நிலை பணிக்குழு கூறியுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள காதலனின் பொறுப்பாதரவில் குறுகியகால வருகையாளர் அட்டையில் வியட்னாமிலிருந்து கடந்த பிப்ரவரியில் அப்பெண் இங்கு வந்தார். அப்போது வியட்னாம் தொற்று குறைந்த நாடாக இருந்ததால் வியட்னாமியப் பயணிகளுக்காக சிங்கப்பூர் தனது எல்லையைத் திறந்துவிட்டது.
குடும்ப காரணங்களுக்காக குறுகிய கால வருகை அட்டை அளிக்கப்படுகிறது.
சிங்கப்பூருக்குள் நுழைவோர் வெளிநாடுகளிலிருந்து கிருமித்தொற்றை கொண்டு வந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களிடம் பரிசோதனை நடத்தப்படுகிறது என்று பணிக்குழுவின் இணைத் தலைவரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் கூறினார்.
ஜூலை 11ஆம் தேதி வியட்னாமிப் பெண் கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவரை நாடினார். அப்போது அவரிடம் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கேடிவி கூடங்களுக்கு அந்தப் பெண் அடிக்கடி சென்று வந்தது தொடர்பு தடமறிதல் மூலமும் விசாரணை மூலமும் தெரிய வந்தது.
"இங்குள்ள கிருமித்தொற்று எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிய தொற்றுக் குழுமம் மூலம் ஏற்பட்டிருக்கும் பின்னடைவால் நம்பிக்கைக் குலைவு ஏற்பட்டுள்ளது," என்றார் திரு வோங்.
இதுபோன்ற வருகையாளர்களுக்கு குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையத்திடம் முறையாக தகவல் கொடுக்காத உள்ளூர் பொறுப்பாதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
குறுகியகால வருகையாளர்கள் சிங்கப்பூரில் எந்தவொரு வேலையைச் செய்யவோ தொழில் நடத்தவோ அனுமதி இல்லை. தடையை மீறுவோரின் வருகையாளர் அட்டை பறிக்கப்பட்டு அவர்களின் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதோடு மீண்டும் அவர்கள் சிங்கப்பூர் வரத் தடை விதிக்க சட்டம் வகை செய்கிறது.