கேடிவி கிருமித்தொற்றுக் குழுமம் கட்டுக்குள் வந்துள்ளது என்றும் கடந்த மூன்று நாள்களாக அந்தக் குழுமத்தில் ஒற்றை இலக்கத்திலேயே புதிய பாதிப்புகள் பதிவாகின என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.
நேற்று முன்தின நிலவரப்படி, அக்குழுமத்தில் மொத்தம் 237 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டனர்.
கேடிவி குழுமத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான மருத்துவச் செலவுகளை முழுமையாகச் செலுத்தச் செய்யும்படி அரசாங்கம் பரிசீலிக்குமா என்று ஜூரோங் குழுத்தொகுதி எம்.பி. ஸி யாவ் குவான் கேட்டார்.
அதற்கு, "கேடிவி கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்களின் பொறுப்பற்ற நடத்தையால் நாம் அனைவரும் கவலை அடைந்துள்ளோம். ஆனாலும், ஒவ்வொருவர்க்கும் தேவையான மருத்துவப் பராமரிப்பு கிடைப்பதை உறுதிசெய்வது நமது பொறுப்பு," என்று கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு ஓங் பதில் கூறினார்.
கேடிவி கிருமித்தொற்றுக் குழுமம் கண்டறியப்படுமுன், அதாவது ஜூலை 12ஆம் தேதிக்குமுன், படிப்படியான தளர்வுகளை நோக்கி நாடு சென்றுகொண்டிருந்தது என்றும் ஆனால் கேடிவி குழுமம் எதிர்பாராத ஒரு தடைக்கல்லாக அமைந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
துரதிர்ஷ்டவசமாக, அடுத்த, பெரிய கிருமித்தொற்றுக் குழுமமாக ஜூரோங் மீன்பிடித் துறைமுகம் உருவெடுத்ததை அடுத்து, நிலைமையை மாற்றிவிட்டதாக திரு ஓங் கூறினார்.
அக்குழுமத்தில் நேற்று முன்தினம்வரை 792 பேர் பாதிக்கப்பட்டுவிட்டனர். அதுவே, கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கச் செய்து, கடந்த வியாழக்கிழமை முதல் இரண்டாம் கட்ட (அதிகரிக்கப்பட்ட விழிப்புநிலை) நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வித்திட்டதாக அவர் சொன்னார்.