பொதுமக்களுடன் அடிக்கடி கலந்துறவாடும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மேலும் பலருக்கு வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் வாரம் இரண்டு முறை கொவிட்-19 வேகப் பரிசோதனை நடத்தப்படும்.
கடைத்தொகுதிகள், பேரங்காடிகளில் வேலை பார்ப்போர், டாக்சி தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள், விநியோக ஊழியர்கள், வாகனம் ஓட்ட பயிற்சி அளிப்பவர்கள், பொதுப் போக்குவரத்து முன்களப் பணியாளர்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
பரிசோதனைக்கு தேவையான வசதிகளைச் செய்துத் தரும்படி இத்தகைய ஊழியர்களின் முதலாளிகள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். ‘தடுப்பூசி அல்லது தொடர் பரிசோதனை’ என்ற இந்த ஏற்பாடு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கும்.
சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், உணவு, பான நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், உடற்பயிற்சி உடலுறுதிக் கூடங்கள், தனிநபர் பராமரிப்புச் சேவைகள் ஆகியவற்றில் பணியாற்றுவோர் எல்லாரும் ஏற்கெனவே இந்த ஏற்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளனர்.
சிங்கப்பூரில் அதிக காலம் இருந்துவரும் குறுகிய கால அனுமதிதாரர்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் தேசிய தடுப்பூசித்திட்டம் நீட்டிக்கப்படும் என்று அமைச்சு அறிவித்து உள்ளது.