கொவிட்-19 அபாயம் அடிப்படையில் நாடுகளையும் வட்டாரங்களையும் சிங்கப்பூர் நான்கு வகைகளாகப் பிரித்து அவற்றுக்கு வெவ்வேறு எல்லை சார்ந்த நடைமுறைகளைக் கையாளவுள்ளது. அதன்படி, வகை ஒன்று முதல் வகை நான்கு வரையிலான நாடுகளின் கொவிட்-19 நிலவரத்தை நாம் அறிந்துகொள்ளலாம். அத்துடன் 'விடிஎல்' எனப்படும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதை' திட்டத்தின்கீழ் ஜெர்மனி, புருணை ஆகிய நாடுகளுக்கும் எத்தகைய நடைமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம்.
'விடிஎல்' - ஜெர்மனி
ஜெர்மனி செல்ல விரும்புவோர், அங்குள்ள கட்டுப்பாடுகளையும் சரிபார்த்த பின்னர் பயண ஏற்பாடுகளை உறுதிசெய்திட வேண்டும். சிங்கப்பூருக்கு 'விடிஎல்' விமானத்தில் திரும்புவதையும் அவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
சிங்கப்பூர் வருவதற்குமுன் 21 நாட்களாக ஜெர்மனி அல்லது சிங்கப்பூரில் மட்டுமே பயணி இருந்திருக்க வேண்டும்.
மேலும், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும். விமானப் பயணத்திற்கு 48 மணி நேரத்துக்கு முன் கொவிட்-19 'பிசிஆர்' பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
வந்தடைந்ததும் செய்துகொள்ளவிருக்கும் கொவிட்-19 'பிசிஆர்' பரிசோதனைக்காக முன்னதாகவே பதிவு செய்து அதற்குக் கட்டணத்தையும் செலுத்தி இருக்க வேண்டும்.
விமான நிலையத்தில் கடப்பிதழுடன் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் மற்றும் கொவிட்-19 தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தும் கொவிட்-19 'பிசிஆர்' பரிசோதனை முடிவைக் காட்ட வேண்டும்.
சிங்கப்பூர் திரும்பியதும் விமான நிலையத்தில் கொவிட்-19 'பிசிஆர்' பரிசோதனையைச் செய்துகொண்டு உடனே தனியார் போக்குவரத்து வழி தனிமை வளாகத்திற்குச் சென்றுவிட வேண்டும்.
பரிசோதனை முடிவு கிருமித்தொற்று இல்லை என்று உறுதிசெய்யும்வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். பின்னர், குறிப்பிட்ட சில மருந்தகங்களில் கொவிட்-19 'பிசிஆர்' பரிசோதனை செய்துகொள்வதற்கு மூன்றாம் மற்றும் ஏழாம் நாளில் பதிவு செய்திட வேண்டும்.
நாடுகளின் பட்டியல்
ஹாங்காங், மக்காவ், சீனா, நியூசிலாந்து, தைவான் ஆகியவை வகை ஒன்றின்கீழ் அமைந்துள்ள நாடுகள். ஆஸ்திரேலியா, புருணை, கனடா, ஜெர்மனி ஆகியவை வகை இரண்டு நாடுகளாகும். வகை மூன்றின்கீழ் ஆஸ்ட்ரியா, பெல்ஜியம், டென்மார்க், இத்தாலி, ஜப்பான், லக்ஸம்பர்க், நார்வே, தென்கொரியா, சுவிட்சர்லாந்து ஆகியவை அடங்கும். எஞ்சிய மற்ற நாடுகள் அனைத்தும் வகை நான்கின்கீழ் இருக்கும்.
'பிசிஆர்' பரிசோதனை
வகை ஒன்று, இரண்டின்கீழ் உள்ள நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக கொவிட்-19 'பிசிஆர்' பரிசோதனை தேவைப்படாது. இருப்பினும், சிங்கப்பூர் வந்ததும் விமான நிலையத்தில் அப்பரிசோதனை செய்யப்படும்.
தனிமை உத்தரவு
வகை ஒன்றின்கீழ் உள்ள நாடுகள், 'விடிஎல்' திட்டத்தின்கீழ் இணைந்த நாடுகள் இரண்டுக்கும் தனிமை உத்தரவு இருக்காது. எஞ்சிய நாடுகள் அனைத்துக்கும் தனிமை உத்தரவு இருக்கும்.
குறுகியகால வருகையாளர்கள்
வகை ஒன்று மற்றும் 'விடிஎல்' திட்டத்தின்கீழ் உள்ள நாடுகளிலிருந்து மட்டுமே குறுகியகால வருகையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.