கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டு வரும் 37 தடுப்பூசி நிலையங்களில் நான்கு நிலையங்கள் இம்மாத இறுதியில் மூடப்படும். தடுப்பூசி போடப்பட்ட விகிதம் சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி நிலையங்களும் அதற்கேற்றாற்போடல மூடப்படும் என்றார் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி.
இருப்பினும், தடுப்பூசியை வழங்கும் பொதுச் சுகாதார தயார்நிலை மருந்தகங்களின் (பிஎச்பிசி) எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று அவர் சொன்னார். தற்போது தடுப்பூசியை வழங்கும் மருந்தகங்களின் எண்ணிக்கை 79.
இது அக்டோபர் இறுதிக்குள் கிட்டத்தட்ட 100க்கும் மேலாக அதிகரிக்கப்படும் என்றார் டாக்டர் ஜனில்.
தடுப்பூசி நிலையம் அல்லது 'பிஎச்பிசி'க்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்களுக்காக அரசாங்கத்தின் நடமாடும் மற்றும் இல்லத் தடுப்பூசிக் குழுக்கள் இயங்கி வருவதையும் அமைச்சர் சுட்டினார். சிங்கப்பூரின் கொவிட்-19 நிலவரம், தடுப்பூசி மற்றும் வர்த்தகங்களின் திறப்பு தொடர்பிலான சிங்கப்பூரின் திட்டங்கள் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் 19 உறுப்பினர்கள் கேள்வி கேட்டதையொட்டி டாக்டர் ஜனில் இவ்வாறு பதிலளித்திருந்தார். தற்போது, மக்கள்தொகையில் 81 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இருந்தாலும் தடுப்பூசி விகிதம் ஒன்று மட்டுமே, அடுத்த கட்டத் தளர்வுக்கான நிபந்தனை அல்ல என்றார் அமைச்சர் ஜனில்.
"தடுப்பூசி விகிதங்களைத் தவிர, நாம் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை, தொற்றின் போக்கு, பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு உட்பட்ட நமது சமூகச் செயல்பாடுகள், பரிசோதனைகள் நிலவரம் ஆகியவற்றையும் நாம் கருத்தில்கொள்ளவேண்டும்," என்று அவர் கூறினார்.