முதியோருக்கு வலியுறுத்து; அக்டோபர் 10 வரை சிறாருக்கு சமய வகுப்புகள் இல்லை
முற்றிலும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டு இருந்தாலும் 60 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள முதியோர் சமய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறது.
சிறார்கள் சமய வகுப்புகளில் கலந்துகொள்ள தற்காலிக தடை விதிக்கப்படும் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு தெரிவித்தது. சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றை ஒடுக்க செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 24 வரை கடுமையான கட்டுப்பாடுகள் இடம்பெறுகின்றன.
அந்தக் கட்டுப்பாடுகள் பற்றி கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு வெள்ளிக்கிழமை அறிவித்தது. 12 மற்றும் அதற்கும் குறைந்த வயதுள்ள சிறார்களுக்கான சமய வகுப்புகள் போன்ற சேவைகள் அக்டோபர் 10 வரை இரண்டு வார காலம் நிறுத்தி வைக்கப்படும்.
இருந்தாலும் பாதுகாப்பு நிபந்தனைகளையொட்டி இடம்பெறும் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் சிறார்கலந்துகொள்ளலாம். 12க்கும் அதிக வயதுள்ளவர்கள் சமய சம்பிரதாய நிகழ்ச்சிகள், சமய வகுப்புகள் போன்றவற்றில் தொடர்ந்து கலந்து கொள்ளலாம்.
இருந்தாலும் அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒரே நேரத்தில் 50 பேருக்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்ளக் கூடாது.
அப்படி கலந்துகொள்வோரும் இரண்டு பேருக்கு மேல் சேர்ந்து இருக்க முடியாது. சமய வகுப்புகளில் கலந்து கொள்வோர் 2 மீட்டர் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சமய அமைப்புகள் கூடுமான வரை இணையத்தில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அமைச்சு கேட்டுக்கொண்டு உள்ளது.
ஈமச்சடங்குகள், ஈமச்சடங்கிற்கு முந்தைய, பிந்தைய சடங்குகளில் இம்மாதம் 27ஆம் தேதி முதல் எந்த ஒரு நேரத்திலும் 30 பேருக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளக்கூடாது. அவர்கள் இரண்டு பேருக்கு மேல் சேர்ந்து இருக்கக்கூடாது.
சமய நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்படவில்லை.
என்றாலும் வாட்டர்லூ ஸ்திரீட்டில் இருக்கும் குவான் இம் தோங் ஹுட் சோ ஆலயத்தைப் போன்ற சில வழிபாட்டு இடங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.
கூட்டு வழிபாடு மற்றும் வழிபாட்டுச் சேவைகள் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளில் மாற்றம் இல்லை.
இந்தக் காலகட்டத்தின்போது துப்புரவாளர்கள், தொண்டூழியர்கள் உள்ளிட்ட சமய மற்றும் ஆதரவு ஊழியர்கள் அனைவரும் சேவைகளில் ஈடுபடுவதற்கு முன்னதாக சுயமாக கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று அமைச்சு வலியுறுத்தி உள்ளது.
சமய அமைப்புகள் தங்கள் வழிபாட்டு இடங்களை, கலந்துகொள்வோருக்கான குறிப்பிட்ட வரம்புடன் திருமண நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.