950,000 குடும்பங்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு கட்டணக் கழிவு

950,000 குடும்பங்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு கட்டணக் கழிவு

2 mins read
21afd60b-7cae-47e5-b845-6683da2bb94c
-

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் சுமார் 950,000 குடும்பங்கள் தங்களுக்கான காலாண்டு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு கட்டணக் கழிவுகளை இம்மாதம் பெறும் என நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது.

கட்டணக் கழிவுகள் வீவக வீட்டின் வகையைப் பொறுத்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாறுபடும்.

ஓரறை மற்றும் ஈரறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு $100, ஈரறை வீடுகளுக்கு $90, மூவறை வீடுகளுக்கு $90, நான்கறை வீடுகளுக்கு $80, ஐந்தறை வீடுகளுக்கு $70, எக்சிக்யூட்டிவ் வீடுகள் மற்றும் பல தலைமுறை வீடுகளுக்கு $60 என யு சேவ் கட்டணக் கழிவுகள் வழங்கப்படும்.

குடும்பங்களின் செலவுகளைச் சமாளிக்க உதவும் வகையில் வழங்கப்படும் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு, யு சேவ் கட்டணக் கழிவு மற்றும் யு சேவ் சிறப்புத் தொகை ஆகியவற்றுக்காக இந்த நிதி நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகை $460 மில்லியன்.

யு சேவ் சிறப்புத் தொகை என்னும் கூடுதல் உதவி இந்த நிதி ஆண்டின் ஏப்ரல், ஜூலை மாதங்களில் வழங்கப்பட்டது.

இந்த சிறப்புத் தொகை, நிச்சயமற்ற சூழலில் குடும்பங்களை ஆதரிக்கும் பொருட்டு வரவு செலவுத் திட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்ட $900 மில்லியன் குடும்ப ஆதரவு உதவித் தொகுப்பின் ஒரு பகுதி. வழக்கமாக, ஓரறை மற்றும் ஈரறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் நிதி ஆண்டில் சராசரியாக மூன்று முதல் நான்கு மாதங்கள் வரையிலான தங்களது பயனீட்டுக் கட்டணத் தொகைக்கான கழிவு

களைப் பெறும்.

கூடுதலாக வழங்கப்பட்ட யு சேவ் சிறப்புத் தொகை அவர்களின் 4½ மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான பயனீட்டுக் கட்டணங்களைச் சமாளிக்கக் கைகொடுக்கும்.

அதேபோல மூவறை மற்றும் நான்கறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் கூடுதல் ஆதரவு மூலம் 1½ மாதங்கள் முதல் மூன்று மாதங்கள் வரையிலான பயனீட்டுக் கட்டணக் கழிவுகளைப் பெற்றிருக்கும். இந்த அக்டோபரிலும் அடுத்தகட்ட ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு-யு சேவ் கட்டணக் கழிவுகள் ஜனவரியில் வழங்கப்படும்போதும் யு சேவ் சிறப்புத் தொகை இடம்பெறாது.

ஜிஎஸ்டி கட்டணக் கழிவு என்பது 2012 ஆம் ஆண்டு முதல் நடப்பில் இருக்கும் நிரந்தரத் திட்டம்.

குறைந்த, நடுத்தர வருமான சிங்கப்பூரர்கள் தங்களது ஜிஎஸ்டி செலவுகளைச் சரிக்கட்டுவதில் உதவிக்கரம் நீட்டும் பொருட்டு இத்திட்டம் அப்போது உருவாக்கப்பட்டு தொடர்ந்து நீடிக்கிறது.

கடந்த நிதி ஆண்டில் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு, சிறப்புத் தொகைகளை உள்ளடக்கிய யு சேவ் திட்டங்கள் போன்றவை வழியாக அரசாங்கம் $630 மில்லியனை வழங்கியது.