புளோக் 116ஏ ரிவர்வேல் டிரைவில் 15வது தளத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று சனிக்கிழமை (அக்டோபர் 9) தீச்சம்பவம் ஏற்பட்டதையடுத்து, ஏறக்குறைய 100 குடியிருப்பாளர்கள் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பிற்பகல் 1.40 மணியளவில் தீச்சம்பவம் பற்றி தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
சம்பவ இடத்திற்குத் தீயணைப்பாளர்கள் வந்தவுடன் வீடு ஒன்றில் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. அந்த வீட்டில் அப்போது எவரும் இல்லை.
அந்த வீட்டின் படுக்கையறையில் தீ மூண்டது. தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
தீயணைப்பாளர்கள் வருவதற்கு முன்னர், தீப்பற்றிக்கொண்ட அந்த வீட்டில் இருந்தவர்களில் ஒருவர் 15வது மாடிக்குத் திரும்பினார். மின்தூக்கி நிறுத்துமிடம் வரை கரும்புகை வெளியேறியது.
புகையைச் சுவாசித்ததற்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அந்த மாது கொண்டு செல்லப்பட்டார்.
தீப்பற்றிய அந்த வீட்டில் தம்பதியர் இருவரும் அவர்களது பிள்ளைகளும் பணிப்பெண் ஒருவரும் வசித்து வந்ததாக அண்டைவீட்டார்கள் கூறின.
தீச்சம்பவத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெறுகிறது. வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றில் இரண்டு நாள்களில் ஏற்பட்ட மூன்றாவது தீச்சம்பவம் இது.