கி.ஜனார்த்தனன்
'ஸ்குவிட் கேம்' எனப் பிரபலமாக அழைக்கப்படும் 'ஓஜிங்-இயோ கெயிம்' (Ojing-eo Geim) என்ற தென்கொரிய நாடகம் பற்றிய பேச்சுதான் இன்றைய தேதியில் எங்கும் கேட்கிறது.
மாறுபட்ட கதைக்களம் இதை வேறுபடுத்திக் காட்டுகிறது. பணத்திற்காக தங்களது உயிரையே பணயமாக வைத்து ஆபத்தான விளையாட்டுகளை விளையாடுவோரைப் பற்றியது இந்த நாடகம்.
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியீடு கண்டது ஒன்பது பாகங்கள் கொண்ட இந்நாடகம். இதன் வசனம் 2009ஆம் ஆண்டிலேயே எழுதப்பட்டது. ஆனால் இக்கதை அருவருப்பானது என்றும் உண்மையில் நடக்கக்கூடியது அல்ல என்றும் கூறி, பலரும் இதைத் தயாரிக்க மறுத்தனர்.
ஒரு பக்கம் அவர்களின் பார்வையில் நியாயம் இருந்தாலும் மக்கள் ஸ்குவிட் கேம் நாடகத்துக்கு பலத்த வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இதுவரை சுமார் 111 பில்லியன் முறை நாடகம் பார்க்கப் பட்டுள்ளது.
கதைச்சுருக்கம்
சியோங் ஜி ஹுன் என்ற இதன் முக்கிய கதாபாத்திரத்துக்கு ஏகப்பட்ட கடன்.
வாழ்க்கை அவர் கட்டுப்பாட்டில் இல்லை. பணத்திற்காக விளையாடும்படி திடீரென ஒருவர் அணுகும்போது இவர் அதை ஏற்றுக்கொள் கிறார். சியோங் கடத்தப்பட்டு, பெயர் தெரியாத தீவில், ஒரு சுரங்கத்தின்கீழ் நூற்றுக் கணக்கானோருடன் போட்டியிடும் சூழலில் தள்ளப்படுகிறார்.
விளையாட்டில் ஒருவர்தான் 45.6 பில்லியன் வோன் பணத்தை (சுமார் $52 மில்லியன்) வெல்ல முடியும்.
தோற்றால் கொல்லப்படுவோம் என்ற உண்மை விளையாட்டாளர்களுக்கு முதல் சுற்றில்தான் புலப்படும். ஆனால் அவர்கள் விளையாட்டைக் கைவிடாமல் தொடர்வது தான் ஆச்சரியம்.
பொருளியல் ஏற்றத்தாழ்வு
மில்லியன் கணக்கானோர் இந்த நாடகத்தைப் பார்க்க பல காரணங்கள் உண்டு என்று கூறப்படுகிறது. சமூகச் சிக்கல்களைப் பெருக்கிக் காட்டும் ஒரு கண்ணாடி என்பது அவற்றில் ஒன்று. சமூக ஏற்றத்தாழ்வு, வறுமை, கடன், பெண்களின் இயலாமை போன்ற பிரச்சினைகள் இதில் பேசப்படுகின்றன.
பரிசுக்காக சக மனிதரையே சாகடிக்க இத்தனை பேர் துணிவது, சமுதாயத்தில் மீண்டுவர வழியில்லாமல் நம்பிக்கை அற்று இந்நிலைக்குத் தள்ளப்படுவது, அளவுக்கு அதிகமாக செல்வம் படைத்தவர்கள் உண்மையிலேயே மனிதர்களின் உயிருடன் விளையாடி வக்கிரமாக ரசிப்பது போன்ற அவலங்களும் காட்டப்படுகின்றன.
பொருளியல் ஏற்றத்தாழ்வால் நடுத்தர மக்கள் கடனாலும் பல்வேறு பிரச்சினை களாலும் சிரமப்படுவதைப் பணம் படைத்தோர் பொருட் படுத்துவதில்லை என்ற எண்ணப்போக்குப் பிரபலமாகி வருவதை 'மூடிஸ்' கடன் நிறுவனத்தில் பணியாற்றும் ஆய்வாளர் குமரேசன் சுப்பிர மணியன், 32, சுட்டினார்.
"வசதி குறைந்தவர்கள் சோம்பேறிகள் என்றும் அவர்கள் உழைக்க மறுக்கின்றனர் என்றும் சிலர் குறைகூறுவது உண்டு. ஆனால், வறுமையால் ஏற்படும் இக்கட்டை கதாபாத்திரங்கள் எடுக்கும் ஆபத்தான முடிவுகள் காட்டுகின்றன.
"ஒரு சிலரிடம் மட்டுமே பெரும் பணமுள்ள முதலாளித் துவ சமுதாயம் இதற்கு முக்கிய காரணம் என்று கருது கிறேன்," என்றார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டம் பெற்ற திரு குமரேசன்.
விளையாட்டுகளில் மடி பவர்களுக்கும் அவற்றை நடத்துபவர்களுக்கும் உள்ள ஓர் ஒற்றுமையை நிகழ்ச்சியின் இறுதிப் பாகம் விளக்குகிறது.
இரு பிரிவினருக்கும் வாழ்க்கை பொருள் அற்றதாக மாறுகிறது. பணமில்லாமல் போனாலும் அளவுக்கு அதிக மான பணம் இருந்தாலும் இதே நிலைதான் என்று ஒரு கதாபாத்திரம் சொல்லுவதைச் சுட்டிய திரு குமரேசன், இதை உளவியல் ரீதியில் பார்க்க வேண்டும் என்றார்.
"இதனை ஆங்கிலத்தில் கத்தார்சிஸ் (catharsis) என்பார்கள். எந்தத் துன்பமும் அனுபவிக்காதவர்கள் சிலர், ஏதோ ஒரு பிரச்சினை அல்லது அபாயத்தை மூட்டிவிட்டு அதன் மூலம் உயிர் வாழும் உணர்வைப் பெறுகின்றனர்," என்று கூறிய திரு குமரேசன், இந்த உணர்வை சாதாரண வாழ்க்கையில் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.
சிறுமைப்படுத்தப்படுதல்
'ஸ்குவிட் கேம்' தொடரில் சிறார்க்கான விளையாட்டுகள், மாணவர்கள் அணியும் விளையாட்டு உடைகள், பிள்ளைகளைக் கவரும் வண்ணங்கள் நிறைந்த இடங்கள் போன்ற அம்சங்களின் வழி போட்டியாளர்கள் அனைவரும் பிள்ளைகள் ஆக்கப்படுவது இந்நிகழ்ச்சி பயன்படுத்தும் மற்றோர் உத்தி.
பணம் இல்லாதவன் பிணம் என்கிறது ஒரு பழமொழி. இங்கு பணம் இருப்பவர்கள் தான் தங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடிந்த பெரியவர்கள் என்ற சமூகக்கருத்து சித்திரிக்கப்படுகிறது.
சிறுவர்களாக இருந்தபோது அனுபவித்த வெற்றி, தோல்வி, அவமானங்கள் ஆகியவற்றை நினைவு படுத்தும் விளையாட்டுகள், பிள்ளைப்பருவத்தில் ஏற்பட்ட துன்பத்தை பலருக்கும் நினைவூட்டலாம்.
"முன்னேற வழியில்லாதவர்கள் தங்களது வாழ்க்கையின் தொடக்கத்திற்குத் தள்ளப்படும் உணர்வை இந்த நாடகம் காட்டுகிறது," என்று உளவியல் ஆர்வலர் புவனேஸ்வரி சண்முகம், 30, தெரிவித்தார்.
பாலினப் பாகுபாடு
'ஸ்குவிட் கேம்' விளையாட்டுகளில் பெண்களைவிட ஆண்களே அதிகம் பங்கேற்றுள்ளனர். ஆனால் இந்த விளையாட்டில் பெண்கள், ஆண்களைவிட அதிக அபாயத்தை எதிர்நோக்குகின்றனர். உடல் வலிமை தேவைப்படும் அங்கங்களில் அவர்கள் வீழ்த்தப் படுகின்றனர்.
நாடகத்தில் உள்ள பெண்கள் அறத்திற்காக உயிரையே இழப்பவர்களாக இருந்தபோதும், ஆண்களின் இயற்கையான உடல் வலிமை அவர் களுக்குச் சாதகமாக இருப் பதைக் காண்கிறோம்.
எளியோருக்குப் பரிவு காட்டும் பண்பு நீங்கினால் சமுதாயம் வலியவரின் விளையாட்டுக் களமாக மாறலாம்.
வாழ்க்கையில் சறுக்கி விழுபவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கடமை என்ற நல்ல பாடத்தையும் 'ஸ்குவிட் கேம்' நாடகத் தொடர் உணர்த்துகிறது.