இணையவழிக் கூட்டத்தில் கொவிட்-19,
மியன்மார் விவகாரங்கள் பற்றி கலந்துரையாடப்படும்
பிரதமர் லீ சியன் லூங் இன்று முதல் வரும் வியாழக்கிழமை 28ஆம் தேதி வரை நடைபெறும் ஆசியான் உச்சநிலைக் கூட்டத்திலும் மற்ற சந்திப்புகளிலும் வட்டாரத் தலைவர்களையும் உலக நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார். கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலில் அந்த உச்சநிலைக் கூட்டம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இணையம் வழியாக நடைபெறுகிறது.
இம்முறை அதன் சந்திப்புகள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. உச்சநிலைக் கூட்டத்தின் இவ்வாண்டுக்கான கருப்பொருள் 'நாம் பரிவு காட்டுகிறோம், நாம் ஆயத்தமாக உள்ளோம், நாம் வளம் பெறுவோம்' என்பதாகும்.
கொவிட்-19 கிருமிப் பரவலிலிருந்து மீட்சியடையும் பணிகள் குறித்து உச்சநிலை கூட்டத்தில் பெரிதும் பேசப்படும்.
ஆசியானும் மற்ற பங்காளி நாடுகளும் அனைத்துலகச் சமூகமும் சேர்ந்து மேலும் வலுவான பொதுச் சுகாதார கட்டமைப்புகள், விநியோகச் சங்கிலிகள், பொருளியல்களை உருவாக்கும் வழிகள் பற்றி ஆசியான் தலைவர்கள் கலந்துபேசுவார்கள் என்று பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. இவை கிருமிப் பரவலிலிருந்து மீள்வதற்கும் வருங்கால நெருக்கடிகளைச் சமாளிக்க ஆயத்தம் ஆவதற்கும் வழிகள் காண்பது அதன் நோக்கம்.
"அத்துடன், வட்டார, அனைத்துலக நிகழ்வுகளைப் பற்றிய கருத்துகளை அவர்கள் பரிமாறிக் கொள்வர். வட்டார ஒத்துழைப்பையும் ஆசியானின் முக்கியத்துவத்தையும் அமைதி நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் முயற்சிகளைப் பற்றியும் அவர்கள் கலந்துபேசுவர்," என்று பிரதமர் அலுவலகம் கூறியது.
மியன்மார் அரசியல் விவகாரம் பற்றியும் ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் பேசப்படும் என்று கருதப்படுகிறது.
இந்த வாரம் நடைபெறும் கூட்டங்களுக்கு மியன்மார் ராணுவத் தலைவர் மிங் ஆங் ஹிலாய்ங்கைத் தவிர்த்துவிட்டு, அரசியல் சார்பற்ற பிரதிநிதியை ஆசியான் அழைத்துள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் கூட்டங்களுக்கு புருணை மன்னர் ஹாசானா போல்கியா தலைமை வகிப்பார்.