லேக்சைட், சைனீஸ் கார்டன் எம்ஆர்டி நிலையங்களை இணைக்கும் புதிய 5.6 கிலோ மீட்டர் நீளமுள்ள சைக்கிள் பாதையை தாமான் ஜூரோங் குடியிருப்பாளர்கள் இனி பயன்படுத்தி அவ்வட்டாரத்தில் உள்ள பள்ளிகள், பூங்காக்கள், சந்தைகள் ஆகியவற்றுக்குச் செல்லலாம். புதிய பாதை ஜூரோங் லேக் வட்டாரத்தில் உள்ள 15 கிலோ மீட்டர் கட்டமைப்புடன் இணைகிறது.
இதனால் ஜூரோங் ஈஸ்ட்டை 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் குடியிருப்பாளர்கள் அடைந்துவிடலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது. அடுத்த சில மாதங்களில் தெம்பனிஸ் வட்டாரத்தில் மற்றொரு 4 கிலோ மீட்டர்
நீளமுள்ள சைக்கிள் பாதை திறக்கப்படும். அதையும் சேர்த்து சிங்கப்பூர் எங்கும் உள்ள சைக்கிள் பாதைகளின் மொத்த தூரம் ஏறத்தாழ 500 கிலோ மீட்டராகும் என்று ஆணையம் கூறியது. நகரங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்த இந்தச் சைக்கிள் பாதைகள் அமைத்துத் தரப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
குடியிருப்பாளர்களுக்குப் பாதுகாப்பான பயணப் பாதை வழங்கவும் சைக்கிள் பாதைகள் திறக்கப்படுவதாக ஆணையம் தெரிவித்தது. 2030ஆம் ஆண்டுக்குள் 1,300 கிலோ மீட்டர் தூரமுள்ள சைக்கிள் பாதைகளைக் கொண்டிருக்க சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.
ஜூரோங் சைக்கிள் பாதையை ஜூரோங் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் தர்மன் சண்முகரத்னம் நேற்று திறந்து வைத்தார். சைக்கிள் ஓட்டிகளும் பாதசாரிகளும் அருகருகே பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய கூடுதல் இடம் அமைத்துத் தரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.