சிராங்கூன் கார்டனில் உள்ள ஓர் உடலுறுதிக் கூடம், இன உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத தீபாவளிக் காணொளியைப் பதிவிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
எஃப்45 உடலுறுதிக் கூடம், கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 5) அக்காணொளியை அதன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டது. அக்காணொளியில், உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த இரண்டு பெண்கள், தலையை ஆட்டியபடி ஆங்கிலத்தில் தீபாவளி வாழ்த்துகளைக் கூறினர். பின்னால் சிரிப்பொலியும் கேட்டது.
உடலுறுதிக் கூடம் அக்காணொளியை அகற்றியபோதும், ‘வேக் அப் சிங்கப்பூர்’ ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் பக்கங்களில் அது மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டது. அக்காணொளி 368,000க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. 2,000 கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பலரும் காணொளியைக் கண்டித்தனர்.
அதன் பின்னர், எஃப்45 உடலுறுதிக் கூடம், இன்ஸ்டகிராமில் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டது. ஒருவரின் உணர்வுகளைக் காயப்படுத்துவதோ நகைப்பதோ தனது நோக்கம் இல்லை என்று அது தெளிவுபடுத்தியது.