சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப் பரவலின்போது வேறு எந்த நெருக்கடிகாலத்திலும் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு விகிதம் குறைந்தது. வர்த்தக, தொழில் அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்தது.
முந்தைய நெருக்கடிகளின்போது அவ்வளவு பாதிக்கப்படாத சேவைத் துறை, கிருமிப் பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கிருமிப் பரவல் தொடங்கியதி லிருந்து இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டுக்குள், சிங்கப்பூரில் இருந்த வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையில் மொத்தம் 196,400 குறைந்தன.
இதில் கடந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் மட்டும், அதாவது கிருமிப் பரவலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின்போது, 113,500 வேலைகள் குறைந்தன.
முந்தைய காலங்களில், ஒரு நெருக்கடியின் உச்சத்திலிருந்து முடிவு வரைக்கும் வேலைவாய்ப்பின் விகிதம் குறைந்திருக்கிறது. உதாரணத்துக்கு டாட்.காம் நெருக்கடிகாலத்தின்போது ஒட்டுமொத்த வேலைகளில் 79,500 வேலைவாய்ப்புகள் குறைந்தன. ஆசிய பொருளாதார நெருக்கடியின்போது, 42,100 வேலைகள் இல்லாமல் போயின. உலகளாவிய நெருக்கடியின்போது 13,800 வேலைவாய்ப்புகள் குறைந்தன.
ஆனால் இவற்றை எல்லாம் விட கிருமிப் பரவலால் ஏற்பட்ட பொருளியல் நெருக்கடியின்போது வேலை இழப்புகள் அதிகம்.
முன்னைய நெருக்கடிகளைப் போல இல்லாமல், கொவிட்-19 கிருமிப் பரவல் சிங்கப்பூர் பொருளியலை ஐந்து வழிகளில் ஒரே நேரத்தில் பாதித்தது.
குறிப்பாக இது கிருமிப் பரவலின் ஆரம்ப கட்டத்தில் அதிகம் ஏற்பட்டது, என்று வர்த்தக, தொழில் அமைச்சு கூறியது.
அனைத்துலகப் பயணிகளின் வருகையும் விமானப் பயணங்களும் முடங்கியதால், பயணத் துறையும் விமானத் துறையுடன் தொடர்புடைய ஓட்டல்கள், விமானப் போக்குவரத்து போன்ற மற்ற துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அடுத்து சில்லறை வர்த்தகம், உணவு பானத் துறை போன்ற வற்றையும் பாதிக்கப்பட்டன. பாதுகாப்பு நடவடிக்கைகளும் உள்நாட்டுப் வாடிக்கையாளர்கள் பயனீட்டைக் குறைத்துக்கொண்டதும் இதற்குக் காரணம்.
மூன்றாவதாக, தேவை வலு விழந்ததாலும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகளாலும் ஒட்டுமொத்த வர்த்தகமும் நீர்ப் போக்குவரத்தும் கடந்த ஆண்டுடின் பெரும்பகுதிக்கு முடங்கிப் போயின.
உள்நாட்டுப் பொருளியல் நடவடிக்கைகள் குறைந்ததால், கடந்த ஆண்டிலும் இவ்வாண்டு தொடக்கத்திலும் சொத்துச் சந்தை போன்ற துறைகளில் தேவை குறைந்தது.
ஐந்தாவதாக, வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் பணியாற்றும் கட்டுமானம், கடற்துறை போன்றவற்றிலும் சரிவு ஏற்பட்டது.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் ஏற்பட்ட கிருமிப் பரவல், எல்லைகள் மூடப்பட்டது, வேலையிடங்களில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை இதற்குக் காரணம்.
இந்த ஐந்து வழிகளில் வேலை வாய்ப்புகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, உணவு பானத் துறையில் 21,100 வேலை வாய்ப்புகள் இல்லாது போயின. அடுத்து, ஒட்டுமொத்த வர்த்தகத் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
எனினும், தகவல், தொடர்பு, நிதி, காப்பீடு, நிபுணத்துவச் சேவைகள் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் உருவானதாக வர்த்தக, தொழில் அமைச்சு கூறியது.