ஆண்டு இறுதிக்குள் துவாஸ் துறைமுகத்தின் இரு கப்பல் நிறுத்துமிடங்கள், பயன்பாட்டுக்காக திறந்துவிடப்படும் என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் (எம்பிஏ) நேற்று தெரிவித்தது. 21 நிறுத்துமிடங்களைக் கொண்ட துறைமுகத்தில் முதல் கட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ள இத்திட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 34 மில்லியன் மணி நேரம் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஒட்டுமொத்த துவாஸ் துறைமுகத் திட்டத்தில் கால் பங்கு வேலை முடிந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
துவாஸ் துறைமுகத் திட்டத்தின் மதிப்பு ஏறத்தாழ $20 பில்லியனுக்கு மேல் என்ற நிலையில், 2040ஆம் ஆண்டு வாக்கில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகளும் திட்டமிட்டபடி நடந்துவருவதாக அறியப்படுகிறது.
விநியோகத் தொடரில் ஏற்பட்ட நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக கடந்த சில மாதங்களில் சிங்கப்பூர் அதன் இருப்பு கிடங்குகளை முன்னதாகவே திறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்நிலையில் சிங்கப்பூரின் ஐந்தாவது கொள்கல துறைமுகத்தைத் திறந்துவிடுவது, முக்கியமான ஒரு காலகட்டத்தில் நிகழ்வதாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூரில் சிக்கிக்கொண்ட கொள்கலன்களை வைப்பதற்காக துவாஸ் துறைமுகத்தில் செப்டம்பர் மாதம் 2,000 இருபது அடிகொண்ட இருப்பு இடங்கள் திறந்துவிடப்பட்டன.
துவாஸ் துறைமுகத்தின் முதல் கட்ட கட்டுமானத்தின் பரப்பளவு, 773 காற்பந்துத் திடல்களுக்குச் சமமாகும். இதன் மொத்த பரப்பளவு 414 ஹெக்டர்.
ஓர் ஆண்டில் சிங்கப்பூர் கையாளக்கூடிய இருப்பு இடங்களுக்கு இந்த முதல் கட்ட கட்டுமானம் மேலும் உதவி புரிந்திடும்.
கட்டுமானங்கள் அனைத்தும் முடிவடையும் நிலையில் துவாஸ் துறைமுகம் தற்போதைய நிலையுடன் ஒப்பிடுகையில் மேலும் 50% இருப்பு இடங்களைக் கையாள முடியும்.
நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கலந்துகொண்டு பேசினார்.
கடந்த ஈராண்டாக கொவிட்-19 கொள்ளைநோய் ஏற்படுத்திய தடங்கலுக்குப் பிறகு, துவாஸ் துறைமுகத்தின் முதல் கட்ட பணிகள் முடிவடைந்திருப்பது, கடும் உழைப்பால் விளைந்தது என்றார் அவர். முதல் கட்ட வேலைகள் ஆறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கின. இதற்காக 450க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்காற்றியதாகக் கூறப்பட்டது.
"துன்ப காலத்தில் நமது மீள்திறனை வெளிப்படுத்தும் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல் இது," என்றார் திரு ஈஸ்வரன்.
முதல் கட்ட பணிகளுக்கான இடத்தில் 70%, நிலமீட்பின்வழி கிடைத்தது என்று எம்பிஏ குறிப்பிட்டுள்ளது.