பத்தாண்டுகளில் சந்தித்திராத மோசமான மின்னிலக்க இடையூறுகள் கடந்த வாரம் வங்கியின் வாடிக்கையாளர்களை எரிச்சலடையச் செய்த பிறகு, டிபிஎஸ் வங்கி அதன் செயல்முறைகள் பற்றிய முழு மதிப்பாய்வை மேற்கொள்ளும்.
"வாடிக்கையாளர்களுக்கு எங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்க உரிமை உண்டு, அவர்களின் விரக்தியையும் வேதனையையும் பகிர்ந்து கொள்கிறேன். சேவை தடைக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," என்று டிபிஎஸ் வங்கிக் குழுமத்தின் தலைமை நிர்வாகி பியூஷ் குப்தா நேற்று ராய்ட்டர்ஸ் மாநாட்டில் தெரிவித்தார்.
கடந்த வாரம் குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு மின்னிலக்க வங்கிச் சேவைகள் முடங்கியதால் கணக்கு வைத்திருப்பவர்களால் தங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் போனது.
வங்கிகள் மின்னிலக்க மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டு வருவதால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளும் உயரும் என்று திரு குப்தா குறிப்பிட்டார்.
வங்கி அதன் செயல்முறைகளை மறுபரிசீலனை செய்து, சிறப்பாகச் செய்வதற்கான வழிகளைக் கொண்டு வரும் என்றார்.
கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று டிபிஎஸ் வங்கி அதன் அணுகல் கட்டுப்பாட்டு சேவையகங்களில் சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கியது, இது வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளின் உள் நுழைவைத் தடுத்தது. மறுநாள் காலை பிரச்சினை மீண்டும் தலைதூக்கியது.
நவம்பர் 25ஆம் தேதி அன்று, உள்நுழைவுகள் மற்றும் பரிவர்த்தனை நடவடிக்கைகளை மேற்கொள்ள சில வாடிக்கையாளர்கள் இன்னும் சிக்கல்களை எதிர்கொண்டாலும், அன்று காலை இயல்பு நிலைக்கு திரும்பியது என்றும் இந்த இடையூறு இணையத் தாக்குதலால் ஏற்படவில்லை என்றும் வாடிக்கையாளர் தரவு பாதுகாப்பாக இருப்பதாகவும் டிபிஎஸ் கூறியது.
இந்தப் மின்னலிக்க செயலிழப்பு குறித்து "மேற்பார்வை நடவடிக்கை" மேற்கொள்ளப் போவதாக சிங்கப்பூரின் நாணய ஆணையம் கடந்த வாரம் தெரிவித்தது.
வாடிக்கையாளர் சேவைகளைப் பாதிக்கும் முக்கியமான செயல்முறைகளுக்கான மொத்த திட்டமிடப்படாத வேலையில்லா நேரம் எந்த 12 மாத காலத்திற்குள்ளும் நான்கு மணிநேரத்திற்கு மிகாமல் இருப்பதை நிதி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையம் கூறியது.