திங்கட்கிழமை அன்று (பிப்ரவரி 7) கொவிட்-19 நோய்த்தொற்றுக்காகக் கூடுதலாக 91 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை அன்று 1,074 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்றய நிலவரப்படி இந்த எண்ணிக்கை 1,165க்கு உயர்ந்துள்ளது.
எனினும் சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை திங்கட்கிழமை நிலவரப்படி 7,629ஆகக் குறைந்தது. ஒப்புநோக்க ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 7,639 பேருக்குத் தொற்று உறுதியானது.
மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புக்காகச் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மூன்றாவது நாளாக ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழகை 998 பேர் கொவிட்-19 பாதிப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
திங்கட்கிழமை பதிவான தொற்றுப் பாதிப்பில் 2,341 பேருக்கு பல்படியத் தொடர்வினை பரிசோதனை (பிசிஆர்) மூலம் நோய் கண்டறியப்பட்டது. மேலும் 5,288 பேருக்கு ஆன்டிஜன் விரைவு பரிசோதனை (ஏஆர்டி) மூலம் தொற்று கண்டறியப்பட்டது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 109 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 26 பேர் உள்ளனர்.
கொவிட்-19க்கு மூவர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 177 பேருக்கு தொற்று உறுதியானது.
வாராந்திர தொற்று விகிதம் திங்கட்கிழமை 1.52ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அது 1.49ஆக இருந்தது.