சிங்கப்பூரில் சனிக்கிழமை (பிப்ரவரி 26) பிற்பகலில், கூடுதல் நேரம் திறந்திருந்த பலதுறை மருந்தகங்கள் சிலவற்றில் அதிகக் கூட்டமில்லை; இருப்பினும் தொடர்ந்து பல நோயாளிகள் பொது மருத்துவர்களைக் காணச் சென்றனர்.
பலதுறை மருந்தகங்கள் இன்னும் திறந்திருக்கும் என்பது தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் கூறினர்.
கொவிட்-19 கிருமிப் பரவல் வெகுவாக அதிகரித்ததைத் தொடர்ந்து, நிலைமையைச் சமாளிக்க ஆறு பலதுறை மருந்தகங்கள் திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சு அறிவித்தது.
புக்கிட் பாஞ்சாங், யூனோஸ், காலாங், பயனியர், பொங்கோல், உட்லண்ட்ஸ் ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் பலதுறை மருந்தகங்கள் அவை.
பிப்ரவரி 26 முதல், அடுத்த இரண்டு வாரங்களுக்கு, சனிக்கிழமை பிற்பகல் வேளைகளிலும், ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களிலும் நோயாளிகள் அவற்றை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
பலதுறை மருந்தகங்கள் வழக்கமாக சனிக்கிழமைகளில் காலை 10.30 மணியில் இருந்து பிற்பகல் 12.30 மணிக்குள் மூடப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் அவை மூடப்பட்டிருக்கும்.
புதிய அறிவிப்பின் கீழ், சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணியில் இருந்து நண்பகல் வரையிலும் அந்த ஆறு பலதுறை மருந்தகங்களும் திறந்திருக்கும்.
இருப்பினும், கொவிட்-19 உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளுக்கும், தீவிர சுவாச நோய்க்கான அறிகுறிகள் உடையோருக்கும் மட்டுமே அவை சிகிச்சை அளிக்கும்.
முன்னதாக, 170 பொதுச் சுகாதாரத் தயார்நிலை மருந்தகங்கள் வெள்ளிக்கிழமை முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்குக் கூடுதல் நேரம் திறந்திருக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் அறிவித்திருந்தார்.
பிப்ரவரி மாத மத்தியில் இருந்து அன்றாடக் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேல் இருக்கும் நிலையில், நிலைமையைச் சமாளிக்கக் கைகொடுக்கும் நோக்கில் அந்த மருந்தகங்கள் அவ்வாறு முன்வந்துள்ளன.