கலையை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த நடனக் கலைஞர் திருமதி சாந்தா பாஸ்கரின் உயிர் கலை நிகழ்ச்சி மேடையிலேயே பிரிந்தது.
வாட்டர்லூ சென்டரில் பாஸ்கர் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தின் 70ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட தொடக்க நிகழ்வான 'சங்கீத சப்ததி' இரண்டாவது நாளான சனிக்கிழமை நடந்தது.
நிகழ்ச்சி மேற்பார்வையில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த அவர், நிகழ்ச்சி தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் திடீரென மூச்சுவிட சிரமப்பட்டார். டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு இரவு 8.15 மணியளவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
மோகன் பாஸ்கர், ராம் பாஸ்கர், மீனாட்சி பாஸ்கர் ஆகிய மூன்று பி்ள்ளைகள், நான்கு பேரப் பிள்ளைகள், ஒரு கொள்ளுப் பேரன் ஆகியோருடன் தனது ஏராளமான மூன்று தலைமுறை கலைக் குழந்தைகளையும் விட்டுச் சென்றுள்ளார்
சிங்கப்பூரின் உயரிய கலை, இலக்கிய விருதான கலாசாரப் பதக்கம் வென்ற மூத்தக் கலைஞரான திருமதி சாந்தா பாஸ்கருக்கு வயது 82. சிங்கப்பூரின் கலைச் சின்னங்களில் ஒருவரான அவர் கடந்த ஆண்டின் மாதர் தினத்தை ஒட்டி சிங்கப்பூரின் புகழ்பெற்ற மாதர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
"70 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை வெள்ளிக்கிழமை இரவு அவர் தொடங்கிவைத்தார். இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவற்றை நாங்கள் தொடர்வோம் என்ற நம்பிக்கையோடு அவர் விடைபெற்றதாகக் கருதுகிறோம்," என்றார் பாஸ்கர் ஆர்ட்ஸ் அகாடமியின் கலை நிர்வாகி திருமதி தவராணி.
"எங்கள் இசைக்கச்சேரி தொடங்கியபோது, அவர் தனது இறுதிப் பயணத்தைத் தொடங்கிவிட்டார். கலையோடு கலந்துவிட்டார். 1958ஆம் ஆண்டு அவர் நடனமாட குற்றாலக் குறவஞ்சிப் பாட்டை நாங்கள் பாடினோம். அவர் இழப்பு ஈடு செய்யமுடியாதது," என்றார் பாஸ்கர் கலைக்கழகத்தில் வளர்ந்த குழலிசைக் கலைஞர் கானவினோதன் ரத்னம்.
சிங்கப்பூரில் கலைகள் மிளிரக் காரணமானவர்களில் பாஸ்கர் தம்பதியர் குறிப்பிடத்தக்கவர்கள் என்று நினைவுகூர்ந்தார் திருமதி சாந்தா பாஸ்கரின் முதல் மாணவிகளில் ஒருவரான திருமதி கலைமகள் வடிவேல், 72.
தம்மைவிட 14 வயது மூத்தவரான சிங்கப்பூரின் முன்னோடிக் கலைஞர் அமரர் பாஸ்கரை 1955ல் திருமணம் செய்து, தம்முடைய 16வது வயதில் கேரளாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த திருமதி சாந்தா பாஸ்கர், 70 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரின் கலைத்துறைக்குப் பெரும் பங்காற்றினார். பல நடனக்கலைஞர்களை உருவாக்கினார். உள்ளூரிலும் வெளிநாடு களிலும் எண்ணற்ற நிகழ்ச்சிகளைப் படைத்தார். பல கலாசாரத் தன்மையை நடனத்தில் புகுத்திய முன்னோடியான அவர், 1950களிலேயே பாலே பயிற்சி பெற்ற கோ லே குவான், மலாய் நடனக் கலைஞர் சோம் சைட் போன்ற நண்பர்களிடம் மற்ற நடனங்களில் கூறுகளைக் கற்று நடனங்களை அமைத்தார். ஜூ சியாட்டில் அண்டைவீட்டாராக இருந்த தேசியகீதத்தை இயற்றிய இசையமைப்பாளர் ஜூபிர் சைட்டுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார்.
"அவர் ஒரு இரும்புப் பெண்மணி. எதற்கும் தயங்கமாட்டார். புதிய தொழில்நுட்பம், புதிய முறைகளைக் கற்றுக்கொள்ளத் தயங்கவே மாட்டார். அவரின் நடன அமைப்புகள் பிரம்மாண்டமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். அவர் மிக மிகப் பணிவானவர். எப்போதும் எல்லாருடனும் அன்போடும் கனிவோடும் பேசுவார்," என்றார் இளைய நடனமணி 22 வயது விஷ்ணுபிரியா.
"மலாய், சீன நடனக்கூறுகளை இணைத்து நடனங்களை வடிவமைப்பது அவரின் சிறப்பு. மிகவும் புத்தாக்கமாக சிந்திப்பவர்," என்றார் மற்றொரு மாணவியான பிரிஷாலினி, 25.
நடனமணியாக, இயக்குநராக, நிர்வாகியாக, பல்வேறு பணிகளை தமது கணவர் அமரர் பாஸ்கருடன் இணைந்து செயல்பட்ட அவர், திரு பாஸ்கரின் மறைவுக்குப் பின்னர் பாஸ்கர் கலைக் கழகத்தை தொடர்ந்து வழிநடத்தி வந்தார். கொவிட்-19 சூழலிலும் பல நிகழ்ச்சிகளை மேடையேற்றினார்.
எண் 91, தெம்பனிஸ் லிங்கில் உள்ள 'சிங்கப்பூர் ஃபூனரல் பார்லரி'ல் வைக்கப்பட்டுள்ள திருமதி சாந்தா பாஸ்கரின் உடலுக்கு இன்றும் நாளையும் அஞ்சலி செலுத்தலாம். கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக, அஞ்சலி செலுத்த விரும்புவோர் முன்னதாகவே பதிவுசெய்ய கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்: https://celebratingsantha.youcanbook.me/