பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம் உட்பட ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் வரவுசெலவுத் திட்டம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதங்களில் இவர்கள் கலந்துகொள்ளவில்லை.
கரையோரப் பூங்காவில் நடைபெற்ற மலர் காட்சியகத்தின் திறப்பு நிகழ்ச்சி ஒன்றிலும் குமாரி இந்திராணி கலந்துகொள்ளவில்லை.
தமக்கு நோய்க்கான அறிகுறிகள் மோசமாக இல்லை என்றும் முதல் இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டதுடன் 'பூஸ்டர்' எனும் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதால் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் நிதி மற்றும் தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
கேரி டான், அலெக்ஸ் யாம், செங் லி ஹுய், கான் தியாம் போ ஆகிய பல்வேறு தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. வர்த்தக, தொழில் மற்றும் கலாசார, சமூக, இளையர் துறை ஆகியவற்றுக்கான துணை அமைச்சர் எல்வின் டானும் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்.