திரு டி. ராஜா குமார் தனது இரண்டு சிறு குழந்தைகளுக்கும் அவரது உறவினர்களுக்கும் மிட்டாய்கள், பொம்மைகள் உட்பட பல பரிசுகளை வாங்கினார்.
இம்மாதம் 1ஆம் தேதி திருச்சிராப்பள்ளி நகருக்கு விமானம் மூலம் தான் செல்ல வேண்டிய பயணத்துக்கு முன், தன்னிடம் கடைசியாக மிஞ்சியிருந்த $500ஐ தன் மனைவிக்கு அனுப்பி வைத்தார். நான்கு ஆண்டுகள் இங்கு பணிபுரிந்த பிறகு அவர் தனது குடும்பத்துடன் மீண்டும் இணையப் போவது குறித்து மகிழ்ச்சியாக இருந்தார்.
ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது இரண்டாவது கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட திரு ராஜா, பிப்ரவரி 26 அன்று, விமானப் பயணத்துக்குத் தேவையான பிசிஆர் பரிசோதனையில் தோல்வியடைந்ததை அறிந்து அதிர்ச்சியுடன் மனமுடைந்தும் போனார்.
கடந்த ஜனவரி 26ஆம் தேதி முதல் முறையாக கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டதற்கு பிறகு திரு ராஜாவுக்கு பிப்ரவரி 26ஆம் தேதியன்று இரண்டாவது முறையாக கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
சாரக்கட்டு அமைக்கும் ஊழியரான திரு ராஜா, "எப்படி மீண்டும் இவ்வளவு விரைவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டேன்? இந்த நேரத்தில் எனக்கு உடம்பு சரியில்லாமல் இருந்ததில்லை," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
கடந்த புதன்கிழமை திரு ராஜாவை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சந்தித்தபோது, "என் மனைவி, குழந்தைகளிடம் எனக்குக் கிருமித்தொற்று இருப்பதை சொன்ன போது தொலைபேசியில் அவர்கள் அழுவதைக் கேட்டு, நான் உடைந்து விட்டேன்," என்றார்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து அவரை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டது. விமான நிலையத்திற்கு 110 கிலோமீட்டர் பயணத்திற்கான வாகன வாடகை வைப்புத் தொகை பறிமுதல் செய்யப் பட்டது.
இம்மாதம் 2ஆம் தேதி காத்தோங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் இரண்டு இரவு தங்கிய பிறகு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டார். இன்னும் 12 நாட்களில் ராஜா விமானம் மூலம் வீடு திரும்புவார்.
ராஜாவைப் போலவே மற்றோர் ஊழியரும் இந்த இக்கட்டான நிலைக்கு ஆளானர். 40 வயதான திரு பி. மணிகண்டன் எனும் கட்டுமான ஊழியர், மூன்று முறை நோய்த்தொற்றுக்கு ஆளானார் என்று கூறினார் அவரது முதலாளி திரு சல்மான்.
ஜூலை 2020ல், திரு மணிகண்டனும் மற்றொரு நிறுவனத்தில் உள்ள ஏழு பேரும் கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டனர்.
திரு மணிகண்டன் குணமடைந்த பிறகு, கடந்த ஆண்டு ஜூலை மாதம், அவருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி, திரு மணிகண்டனுக்கு இரண்டாவது முறையாக தொற்று ஏற்பட்டது.
திரு ராஜாவைப் போலவே திரு மணிகண்டனும் இந்தியாவுக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்தார். துரதிருஷ்டவசமாக, அவர் பிப்ரவரி 28ஆம் தேதி பயணத்திற்கு முந்தைய பிசிஆர் பரிசோதனையில் தோல்வியடைந்தார்.
சிங்கப்பூரை விட்டு வெளியேறி, இப்போது தொடர்புகொள்ள முடியாத திரு மணிகண்டன் சார்பாகப் பேசிய திரு சல்மான், "எனது ஊழியர் எந்தப் பிரச்சினையும் இன்றி சிங்கப்பூரை விட்டுச் சென்றதை உறுதிசெய்யும் முயற்சி ஏமாற்றமாக இருந்தது.
"அவருக்கு இரண்டு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆவணங்கள் இல்லாததால், விமான நிறுவனம் அவருக்கு விமானத்தில் ஏற அனுமதிக்க மறுத்தது.
"மணிகண்டன் முன்பு கொவிட்-19 கிருமித்தொற்று இருந்த தாகவும், அவருக்கு இரண்டு தடுப்பூசி போடுவதற்குப் பதிலாக ஒரே ஒரு தடுப்பூசி போடப்படுவது இயல்பானது என்றும் விமான நிறுவன மேலாளரிடம் சொன்னேன்," என்றார்.
திரு மணிகண்டன் குணமடைந்ததற்கான அறிக்கையைக் காட்டிய பிறகே அவரது பயணத்தை எளிதாக்க விமான நிறுவனம் ஒப்புக்கொண்டது.
51 வயதான திரு சல்மான், ஊழியர்களைத் திருப்பி அனுப்பும்போது மற்ற முதலாளிகளும் இதே பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும் என்று கவலைப்பட்டார்.
சிங்கப்பூரில் ஓர் ஊழியரை நீண்டகாலம் தங்க வைக்கும்போது, கருத்தில் கொள்ள வேண்டிய தளவாடச் சிக்கல்கள் உள்ளன.
அவர்களின் வொர்க்பர்மிட் ரத்து செய்யப்பட்ட நிலையில், சிறப்பு அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். உணவு, தங்குமிடம், புதிய விமான டிக்கெட்டுகள் வாங்க வேண்டும்.
"இந்த நிலையிலும் கூட, முதலாளிகள் பல நிச்சயமற்ற தன்மைகளையும் சிரமங்களையும் எதிர்கொள்கின்றனர்" என்று திரு சல்மான் முந்தைய பேட்டியில் கூறினார்.
தாம் விரைவில் தனது குடும்பத்தைப் பார்க்கப் போகிறோம் என்று நிம்மதியாக இருந்தாலும், மீண்டும் தொற்று ஏற்படுமோ என்ற பயம் அவருக்கு உள்ளது.
திரு ராஜா போன்ற ஊழியர்கள் முன்பு பணியிடங்களில் வழக்கமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதால், கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் நிர்ணயிக்கப்பட்ட வழக்கமான பரிசோதனை இனி தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
"நான் எனது அறையில் தங்கியிருக்கிறேன். மக்களிடமிருந்து விலகி இருக்கிறேன். இப்போது என்னிடம் பணம் எதுவும் இல்லை.தங்குமிடத்தின் இலவச வைஃபை யைப் பயன்படுத்துவதே என் குடும்பத்தினருடன் பேசுவதற்கான ஒரே வழி," என்று சோகத்துடன் கூறி னார் திரு ராஜா.