சிங்கப்பூரில் தற்போது வீசிவரும் ஓமிக்ரான் அலை, பள்ளிகளையும் விட்டுவைக்கவில்லை. மாணவர்கள், ஆசிரியர்கள், இதர பணியாளர்கள் பலரை கொவிட்-19 தொற்றியுள்ளது.
இவ்வாண்டின் முதலிரு மாதங்களில், 10 ஆசிரியர்களில் ஒன்றுக்கும் குறைவானோருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.
2020ல் சிங்கப்பூர் பள்ளிகளில் ஏறத்தாழ 15,600 ஆசிரியர்கள் இருந்தனர். அதன் அடிப்படையில் பார்த்தால், பலநூறு ஆசிரியர்களை கொவிட்-19 தொற்றியிருக்கும்.
ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்கள் 72 மணி நேரத்துக்கு தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் முடிவில், ஆன்டிஜன் விரைவு பரிசோதனையில் (ஏஆர்டி) தொற்று இல்லை என உறுதியானால் அவர்கள் பள்ளிக்குத் திரும்பலாம்.
கடந்த டிசம்பரில் உள்ளூரில் முதல் ஓமிக்ரான் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அப்போதிலிருந்து ஏறத்தாழ 27,000 சிறுவர்களை கொவிட்-19 தொற்றியதாக சுகாதார அமைச்சு கூறியது.
கல்வி அமைச்சின் வழிகாட்டுதல்களைப் பொறுத்தமட்டில், கொவிட்-19 தொற்று உறுதியான மாணவர்கள் நலமாக இருக்கையில் 72 மணி நேரத்துக்கு அவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ஏஆர்டி பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியாகி, அவர்கள் நலமாக இருந்தால் பள்ளிக்குத் திரும்பலாம்.
கொவிட்-19 தொற்றுக்கு ஆளான ஆசிரியர்களின் பணியைச் செய்ய தற்காலிக ஆசிரியர்களைப் பள்ளிகள் பணியமர்த்துவதாகக் கூறப்பட்டது.
பள்ளிகளுக்கு ஆதரவளிக்க தலைமையக அதிகாரிகளையும் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சு அனுப்பியுள்ளது.
கொவிட்-19 பாதிப்புகளைப் பள்ளிகள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலிருந்து கற்கும் நடைமுறையை அவை செயல்படுத்தலாம் என்று அமைச்சு கூறியது.
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைப் பள்ளிகள் தொடர்ந்து அமல்படுத்தி வருகின்றன.