சிங்கப்பூரில் ஓமிக்ரான் வகை கொவிட்-19 பரவல் உச்சத்தைத் தொட்டு, இப்போது குறையத் தொடங்கிவிட்டதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
"ஓமிக்ரான் அலை உச்சம் தொட்டு, தணியத் தொடங்கியுள்ளதற்கு நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன. இதனால், இறுதியாக சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்குத் தகுதியான, நீடித்த ஓய்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்," என்று அமைச்சர் ஓங் கூறினார்.
இம்மாதம் 8ஆம் தேதி கிட்டத்தட்ட 22,000 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதற்கு இரு வாரங்களுக்குமுன், அதாவது பிப்ரவரி 22ஆம் தேதியன்று ஏறக்குறைய 26,000 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
தனிநபர் பாதுகாப்பு அங்கி போதுமான அளவில் இருப்பதை உறுதிசெய்தல், தடுப்பூசி வந்ததும் முன்னுரிமை அளிப்பது போன்ற வழிகளில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு முடிந்த அளவிற்கு உதவ தமது அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக திரு ஓங் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று சுகாதார அமைச்சின் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
ஓமிக்ரான் அலை காரணமாக தனியார் மருந்தகங்களும் மருத்துவமனைகளும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் இன்னும் நெருக்கடியில் இருப்பதாக சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி கூறினார்.
பெரும்பாலும் இன்னும் தடுப்பூசி போடாதவர்களாலேயே அந்நெருக்கடி ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
"பெரியவர்களில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மூன்று விழுக்காட்டினரே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோரிலும் கிருமித்தொற்றால் மாண்டோரிலும் 25 விழுக்காட்டினர்," என்றார் டாக்டர் ஜனில்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரைக் காட்டிலும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் கொவிட்-19 தொற்றால் இறக்க 33 மடங்கு வாய்ப்பு குறைவு என்றும் அவர் சொன்னார்.
அத்துடன், தடுப்பூசி போடாவிடில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட, அதுவும் மோசமாக பாதிக்கப்பட குறைந்தது பத்து மடங்கு வாய்ப்பு அதிகம் என்றும் அவர் சுட்டினார்.
இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அல்லது முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரைப் பாதுகாக்கவே தடுப்பூசி அடிப்படையிலான பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதனால்தான் இப்போதுள்ள கட்டுப்பாடுகளை அகற்ற இது உகந்த நேரமல்ல எனும் ஓமிக்ரான் அலை தணிந்ததும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை மேலும் தளர்த்தும் நிலையில் நாம் இருப்போம் என்றும் டாக்டர் ஜனில் கூறினார்.