கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கான புதிய கிருமி எதிர்ப்பு மாத்திரையான பாக்ஸ்லோவிட் (படம்), நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட பலதுறை மருந்தகங்களிலும் பிஎச்பிசி எனும் பொதுச் சுகாதாரத் தயார்நிலை மருந்தகங்களிலும் படிப்படியாக விநியோகிக்கப்படும்.
இங்கு பயன்படுத்த சுகாதார அறிவியல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் கொவிட்-19 மாத்திரை இதுவாகும். ஃபைசரின் மருத்துவ ஆய்வுகள் மூலம் இதில் சில பக்கவிளைவுகள் இருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.
தற்போது, சமூக அளவில் இருமல், காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பலதுறை மருந்தகங்கள், பிஎச்பிசி மருந்தகங்களில் கடுமையான கொவிட்-19 ஆபத்தில் உள்ள நோயாளிகள், நோய் தொடங்கிய ஐந்து நாட்களுக்குள் இருக்கும் நோயாளிகள் இந்த மாத்திரைக்குத் தகுதியுடையவர்கள். ஆனால் இது எப்போது வெளியிடப்படும் என்று குறிப்பிடப்படவில்லை.
அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடுமையான நோய் அபாயத்தில் உள்ள தகுதியான நோயாளிகளும் இந்த மருந்தைப் பெறலாம். ஐந்து நாட்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த மருந்து எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். மேலும் அறிகுறிகள் தோன்றிய ஐந்து நாட்களுக்குள் முடிந்தவரை விரைவில் கொடுக்கப்பட வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, தகுதியான முதன்மை பராமரிப்பு அமைப்புகளில் பயன்படுத்தப்படும் பாக்ஸ்லோவிட்டுக்கான செலவை அது முழுமையாக ஈடுசெய்யும் என்று சுகாதார அமைச்சு கூறியது.
இந்த மருந்து ஐந்து நாள் உட்கொள்வதற்காக அமெரிக்க அரசாங்கத்துக்கு US$530 (S$720) செலவாகும்.
"அதிக ஆபத்துள்ள நோயாளிகள் கடுமையான கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைக் குறைப்பதே முக்கிய நோக்கமாகும்.
"குறிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் இன்னும் குறிப்பிடத்தக்க அழுத்தத்தில் உள்ளனர்," என்று சுகாதார அமைச்சு மேலும் கூறியது.
நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகள், முதியோர்், புற்றுநோய், கடுமையான நுரையீரல், இதயம் அல்லது சிறுநீரக நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதில் அடங்குவர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு சில நோயாளிகளுக்கு மருந்தை வழங்கத் தொடங்கியுள்ளதாகவும் இது ஏற்கெனவே அரசாங்க மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுவதாகவும் தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.
அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகள் உள்ளன என்று சுகாதார அமைச்சு கூறியது.
நடைமுறையில் உள்ள வழிகாட்டுதலின்படி மருந்து பரிந்துரைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக கண்காணிப்பு செயல்முறைகளை நடைமுறைப்படுத்த தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்துடன் இணைந்து பணியாற்றுவதாக அமைச்சு மேலும் கூறியது.
இந்த மருந்தை சமூக அளவில் பயன்படுத்தும் முதல் நாடு சிங்கப்பூர் அல்ல. கனடா இந்த ஆண்டு ஜனவரியில் இந்த மருந்தை பயன்படுத்த தொடங்கிவிட்டது.