பெண்டமியர் சாலையில் கத்தியை ஏந்திய ஓர் ஆடவர் காவல்துறையினரைத் தாக்க முயன்றிருக்கிறார்.
'டேசர்' எனும் ஒருவரைத் தற்காலிகமாகச் செயலிழக்க வைக்கும் கருவியைக் கொண்டு காவல்துறையினர் 64 வயது இங் எங் குய் எனும் அந்த ஆடவரை எதிர்கொண்டனர். ஆனால் அவர் அதற்கு அடங்கவில்லை. அதனால் அதிகாரிகள் துப்பாக்கியால் அவரைச் சுட்டனர்.
இங், பின்னர் மருத்துவமனையில் மாண்டதாகக் காவல்துறை நேற்று முன்தினம் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது.
"டேசர் கருவியைக் கொண்டு ஒருவரை எப்பொழுதும் செயலிழக்க வைக்கமுடியாது, ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பாதிப்பு மாறுபடலாம், செயலிழக்கச் செய்யும் டேசரின் அம்புகள் உடலின் எந்தப் பகுதிகளைத் தாக்குகின்றன என்பதைப் பொருத்து பாதிப்பு ஏற்படும்," என்று காவல்துறைக்கானப் பேச்சாளர் கூறினார்.
'டேசர்' கருவியைக் கொண்டு 50,000 வோல்ட் மின்சாரத்தை உடலில் செலுத்தி ஒருவரைத் தற்காலிகமாகச் செயலிழக்க வைக்கமுடியும். அதிகாரிகள் அதைப் பயன்படுத்தும்போது இரண்டு சிறிய மின்சார அம்புகள் ஒருவரின் தோலில் ஒட்டிக்கொண்டு அவரைச் செயலிழக்கச் செய்யும்.
சில வேளைகளில் மின்சார அம்புகள் உடலில் சரியாகப் பாய்ச்சப்படாமல் இருக்கலாம் அல்லது அவை ஒருவரின் ஆடையில் சிக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் தாக்கப்பட்ட ஆடவரை எதிர்பார்த்தபடி செயலிழக்க வைக்கமுடியாது.
மேலும், உடலில் பாய்ச்சப்பட்ட இரு மின்சார அம்புகளுக்கும் இடையே குறைந்தது 30 செண்டிமீட்டர் அளவு இடைவெளியாவது இருக்கவேண்டும். இல்லாவிடில் தாக்கப்பட்டவர் எதிர்பார்த்தபடி செயலிழந்து போகாமல் இருக்கலாம்.
சிங்கப்பூர் காவல்துறையினர் முதன்முதலில் 2005ஆம் ஆண்டு 'டேசர்' கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
அப்போது கேலாங், புக்கிட் மேரா அக்கம்பக்கத்துக் காவல் நிலையங்கள் அவற்றை உபயோகித்தன.
இச்சம்பவம் நேற்று முன்தினம் பெண்டமியர் சாலையில் உள்ள வீவக புளோக் 33ல் நிகழ்ந்தது. காவல்துறையினரைக் கத்தியால் தாக்க முயன்ற இங், போதைப் பொருள் குற்றவாளி என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் பிற்பகல் நான்கு மணியளவில் அவர் கத்தியை ஏந்தியபடி கூச்சலிட்டபடி புளோக்கின் அடித்தளத்தில் நடந்துகொண்டிருந்தார்.
அதிகாரிகள் அங்கு வந்தபோது புளோக்கின் ஆறாவது மாடியில் இருக்கும் வீட்டிலிருந்து அவர் வெளியே வந்தார்.
கத்தியைக் கீழே போடுமாறு அதிகாரிகள் அவரைக் கேட்டுக்கொண்டனர். ஆனால் இங் அவ்வாறு செய்ய மறுத்ததுடன் அவர்களை நோக்கிச் சென்றார்.
தங்களின் உயிருக்கு ஆபத்து இருந்ததால் 'டேசர்' தாக்குதலுக்கு அடங்காத இங்கை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டனர். மாலை சுமார் 5.13 மணிக்கு இங் உயிர்இழந்தது உறுதிசெய்யப்பட்டது.
முன்னதாக இங் சீருடை அணிந்திருந்த மாணவர் ஒருவரை நோக்கிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த மாணவர் பாதுகாப்பாக அங்கிருந்து சென்றுவிட்டார்.
மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தேடிவந்த இங்கின் வீட்டில் போதைப் பொருள் சம்பந்தப்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.