மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) அதிகாரிகள் தீவு முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் சந்தேகத்தின் அடிப்படையில் 32 போதைப்
பொருள் குற்றவாளிகள் பிடிபட்டனர். டெலிகிராம் போன்ற கைபேசிச் செயலிகள் வாயிலாக போதைப்பொருள் பரிவர்த்தனை நடப்பதைப் பிடிக்க இந்தச் சோதனையை அதிகாரிகள் நடத்தினர். ஏப்ரல் 18, 19 ஆகிய இரு நாட்களும் நடத்தப்பட்ட சோதனையில் $140,000 மதிப்புள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
அவற்றுள் 191 கிராம் ஐஸ் போதைப்பொருள், 718 கிராம் கஞ்சா, 714 கிராம் எக்டஸி மாத்திரைகள் போன்றவை அடங்கும்.
டெலிகிராம் வாயிலாக நடைபெற்ற போதைப்பொருள் பரிவர்த்தனையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் வட்டாரத்தில் 26 வயது ஆடவர் ஒருவரை ஏப்ரல் 18ஆம் தேதி அதிகாரிகள் கைது செய்தனர். அந்த வட்டாரத்தில் இருந்த அவரது வீட்டை சோதனையிட்டபோது போதைப்பொருள்கள் சிக்கின.
அந்த வீட்டிற்கு வந்த 24 வயது ஆடவர் ஒருவரும் போதைப்பொருள் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்.
கைபேசிச் செயலி வாயிலாக இதேபோன்ற போதைப்பொருள் பரிவர்த்தனைகளை இலக்காகக் கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனையில் 50 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்
பொருள் ஒழிப்புப் பிரிவின் உளவுப் பிரிவு துணை இயக்குநர் ஸ்டேன்லி சீ தெரிவித்தார்.
கைபேசிச் செயலி மூலம் நடத்தப்படும் சட்டவிரோதப் பரிவர்த்தனைகளை அதிகாரிகள் கண்டுபிடிப்பது கடினம் என குற்றவாளிகள் கருதுவது தவறு என்றார் அவர். 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்துவோர் மரண தண்டனையை எதிர்நோக்கக்கூடும்.