முரசொலி
உலகம், குறிப்பிடத்தக்க அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திய பொருளியல் நெருக்கடிகள், நிதித் துறை பிரச்சினைகள், இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றை பல முறை பார்த்து அவற்றை ஒற்றுமையாக சமாளித்து மீண்டு வந்துள்ளது.
ஆனால் இனிமேல் முற்றிலும் மீண்டு வரவே முடியாதா என்ற ஓர் ஐயத்தை கிளப்பிவிடும் அளவுக்கு ஒரு மிரட்டலை கொவிட்-19 ரூபத்தில் உலகம் முதன் முதலாக சந்தித்தது இப்போதுதான். கொரோனா இன்னமும் முழுமையாக அகலவில்லை.
கொவிட்-19 தொற்று காரணமாக கடந்த இரண்டாண்டு காலத்தில் அனைத்துலக சமூகம் எதிர்நோக்கிய முன்பின் கண்டறியாத ஒரு சூழல் உலகிற்கும் நமக்கும் பல பாடங்களைக் கற்றுத் தந்து இருக்கிறது.
திடீர் திடீரென கிருமித்தொற்று தலைதூக்கலாம். அப்படிப்பட்ட ஒரு நேரத்தில் அதைத் திறம்பட சமாளிக்கும் வழிமுறையை எப்போதும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதை முன்பைவிட இப்போது உலகம் நன்கு கற்றுக்கொண்டு இருக்கிறது. நாமும் கற்றுக்கொண்டு இருக்கிறோம்.
கொரோனா தொற்று காரணமாக பல மாற்றங்களை நாம் பின்பற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.
அந்தக் கிருமியை அறவே ஒழிக்க முடியாது. அதோடு சேர்ந்துதான் வாழ வேண்டும் என்ற கட்டாயத்திற்கு, மனப்பக்குவத்திற்கு நாம் வந்துள் ளோம். அந்த மாற்றங்கள் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களைக் கடைசி வரை மறக்காமல் மற்றொரு தொற்றுக்கு ஆளாகாத வகையில் அவற்றை ஓர் அரணாக நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எந்தவொரு மிரட்டல் ஏற்படும்போதும் ஒரு சமூகத்துக்கு மீள்திறன் எந்த அளவுக்கு முக்கியம், எவற்றைச் செய்தால் உயிர்பித்து இருக்க முடியும் என்பதை எல்லாம் கடந்த ஈராண்டுகளில் நாம் கற்றுக்கொண்டு இருக்கிறோம்.
இன்னதென்று தெரியாத, அதிவேகமாகப் பரவக்கூடிய, மிகக் கொடூரமான, திடீர் திடீரென உருமாறக்கூடிய, கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் எப்போது, எப்படி வேண்டுமானாலும் தலையெடுக்கக்கூடும் என்ற ஒரு எச்சரிக்கையை கொவிட்-19 நமக்கு மறக்க முடியாத அளவுக்குப் போதித்து இருக்கிறது.
கொரோனா உலகில் உள்ள ஒவ்வொரு சமூகத்தையும் ஒன்றில் இரண்டு பார்த்துவிட்டது. பட்டதே போதும் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டது. எதிர்காலத்தில் தோன்றக்கூடிய தொற்று இதைவிட மோசமாக இருக்கக்கூடும் என்ற ஒரு பயத்தையும் கொரோனா கிளப்பிவிட்டு உள்ளது.
வருங்காலத்தில் தொற்று ஏதேனும் ஏற்பட்டால் நிலைமை எப்படி ஆகும் என்பது இப்போது ஓரளவுக்கு நமக்குப் புரியும். ஒரே நேரத்தில் சமூகத்தில் ஏராளமானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அதை எப்படி தவிர்த்துக்கொள்ள முடியும், எப்படி சமாளிக்க முடியும் என்பதை முன்பைவிட இப்போது ஓரளவுக்குத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறோம்.
அத்தகைய ஒரு நிலை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற ஓர் அணுகுமுறை இனி பலன் தராது. ஆகையால், இப்போதே நாம் அதற்குத் தயாராக வேண்டும் என்பதுதான் கொரோனா நமக்குக் கற்றுக்கொடுத்த மிக முக்கிய பாடம்.
அண்மையில் பிரதமர் லீ சியன் லூங் இதைத்தான் வலியுறுத்திக் கூறினார்.
சிங்கப்பூர் பொது மருத்துவமனை விரிவுரை ஆற்றிய பிரதமர், சுகாதாரப் பராமரிப்பில் முதலீடு செய்வதைப் போலவே பொதுமக்களின் சுகாதாரத்திலும் முதலீடு செய்ய வேண்டிய தேவை ஏற்படும் என்பதை விளக்கினார்.
ஒவ்வொரு நோயாளிக்கும் தலைசிறந்த சிகிச்சையை, கட்டுப்படியாகக்கூடிய வகையில் வழங்குவதில் சுகாதாரப் பராமரிப்பு நடைமுறை ஒருமித்த கவனம் செலுத்துகிறது. பொதுமக்கள் சுகாதாரம் என்பது மொத்த மக்களின் உடல்நலனைக் கட்டிக்காப்பதில் கவனம் செலுத்துகிறது.
ஒரு கிருமி பரந்த அளவில் சமூகத்தில் தொற்றும்போது உடல்நலமிக்க மக்களும் நோயாளியாகக்கூடிய வாய்ப்பு அதிகம் என்பதை கொவிட்-19 மெய்ப்பித்துள்ளது. இதை தவிர்த்துக்கொள்ளும் வகையில் பொதுச் சுகாதார அடிப்படை வசதிகள் தொடர்ந்து மேம்பட வேண்டும்.
நல்ல மருத்துவ வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு ஆதரவு தரும் ஏற்பாடுகள், அறிவியல், உயிரியல் மருத்துவ ஆற்றல் மேம்பாடு, ஆய்வுகளில் உலக ஒத்துழைப்பு ஆகிய அனைத்தும் தொடர வேண்டும்.
இப்படி நடந்தால்தான் எதிர்காலத்தில் எதிர்பாராத விதமாக கொடூரமான தொற்றுகள் தலையெடுக்கும்போது அதன் பாதிப்புகளைத் தவிர்த்துக்கொண்டு கிருமியைச் சுத்தமாக துடைத்தொழிக்கக்கூடிய நல்ல நிலைமையில் நாம் இருக்க முடியும்.
கொவிட்-19 தொற்று மொத்தமாக சமூகத்திற்கு மட்டுமின்றி ஒவ்வொருவருக்கும் பல பாடங்களை கற்று தந்து இருக்கிறது.
அன்றாட வாழ்க்கையில் உடல்நலத்திற்கு, சுகாதாரத்திற்கு உகந்த பழக்கவழக்கங்களை ஆயுட்காலம் வரை பின்பற்ற வேண்டிய அவசியத்தை அது உணர்த்தி இருக்கிறது.
மக்கள்தொகை மூப்படைந்து வரும் நிலையில், தரமான வாழ்வுக்கு அந்தப் பழக்கவழக்கங்கள் பெரிதும் முக்கியமானவை.
ஒருவர் நோய்வாய்படும்போது மட்டும் சிகிச்சையை நாடாமல் உடல் நலனுடன் இருக்கும்போதே காலக்கிரம முறைப்படி மருத்துவரைச் சந்தித்து தன்னுடைய உடல்நலத்தை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்திக் கொண்டு வரவேண்டிய ஓர் அணுகுமுறை நோய்களையும் பாதிப்புகளையும் அவை ஏற்படும் முன்பாகவே தவிர்த்துவிட உதவும்.
இதனால் ஒவ்வொருவருக்கும் மொத்தத்தில் சமூகத்திற்கும் பலன் ஏற்படும். அதோடு மட்டுமின்றி, சுகாதாரப் பராமரிப்பிற்கு நாடு செலவிட வேண்டிய தொகை கணிசமாக மிச்சமாகும். அதை அடிப்படை வசதிகளை மேம்படுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒட்டுமொத்த சமூகத்தின் நலன் என்பது ஒவ்வொருவரின் நலனைப் பொறுத்தே இருக்கும் என்பது தெரிந்ததுதான் என்றாலும் கொரோனா தொற்று இதனை திட்டவட்டமாக வலியுறுத்தி இருக்கிறது.
ஆகையால், கொரோனா கற்றுத் தந்த பாடங்களை, நாம் கற்றுக்கொண்டவற்றை காலாகாலத்திற்கும் மனதில் நிறுத்தி ஒவ்வொருவரும் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
வருமுன் காக்க நாம் ஆயத்தமாக வேண்டும். மிரட்டல், ஆபத்து தலைதூக்கினால் அதைச் சமாளித்து மீண்டு வர உதவும் மீள்திறனை தொடர்ந்து பலப்படுத்தி வரவேண்டும். கொவிட்-19 கிருமியுடன் தொடர்ந்து வாழ வேண்டிய நாம், அதற்கு முற்றிலும் ஆயத்தமாக வேண்டும்.