சிங்கப்பூருக்கும் தென்கொரியாவுக்கும் இடையே கூடுதல் விமானச் சேவைகள் இயங்க வகைசெய்யலாம் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.
அது குறித்து ஆலோசிக்குமாறு தென்கொரிய அதிபர் யூன் சுக்-இயோலிடம் அவர் பரிந்துரைத்தார்.
இருநாடுகளுக்கும் இடையே பயணம் மேற்கொள்வதற்கான தேவை அதிகம் இருப்பதாக திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.
"எல்லைகள் திறக்கப்பட்ட பிறகு கொரியர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பும் இடம் எதுவென்று கேட்டபோது அவர்கள் சிங்கப்பூர் என்று பதிலளித்ததாக அவர் சொன்னார்," என்று தென்கொரிய அதிபர் தம்மிடம் கூறியதைத் திருவாட்டி ஹலிமா தெரிவித்தார்.
"சிங்கப்பூருக்கும் அது பொருந்தும் என்று நான் சொன்னேன். தாங்கள் பயணம் மேற்கொள்ள விரும்பும் இடம் எதுவென்று கேட்டபோது சிங்கப்பூரர்கள் தென்கொரியாவைத்தான் குறிப்பிட்டனர்," என்றும் அதிபர் ஹலிமா கூறினார்.
இருதரப்பு உறவு தொடர்பில் திருவாட்டி ஹலிமாவும் திரு யூனும் சந்தித்தனர்.
தென்கொரியாவின் புதிய அதிபரான திரு யூனின் பதவியேற்பு சடங்கில் கலந்துகொள்ள திருவாட்டி ஹலிமா அந்நாட்டின் தலைநகர் சோலுக்குப் பயணம் மேற்கொண்டபோது இருவரும் சந்தித்தனர்.