வரும் ஜூன் மாதத் தொடக்கத்தில் சிங்கப்பூர் அமைச்சரவையில் மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
அப்போது நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருங்காலத்தில் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகத் திரு வோங் பதவியேற்பார் என்று சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
அமைச்சரவை மாற்றங்களுக்கான திட்டங்கள் வரையப்பட்டு வந்துள்ளதாகவும் தமது அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பிறகு அவை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதமர் லீ தெரிவித்தார்.
பிரதமர் லீ தற்போது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெறும் ஆசியான்- அமெரிக்கா உச்சநிலை சிறப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். வெள்ளிக்கிழமை (மே 13) மாநாடு நிறைவுற்ற பிறகு செய்தியாளர்களிடம் பிரதமர் பேசினார்.