ஈரச்சந்தைகளிலும் பேரங்காடிகளிலும் குவிந்த கூட்டம்
பல ஈரச்சந்தைகளிலும் பேரங்காடிகளிலும் நேற்றுக் காலை புதிய கோழிகள் மளமளவென விற்றுத் தீர்ந்தன.
வரும் ஜூன் 1ஆம் தேதியில் இருந்து ஒரு மாதத்திற்கு 3.6 மில்லியன் கோழிகள் வரையிலான ஏற்றுமதிக்குத் தடை விதிப்பதாக மலேசியா அறிவித்துள்ளது.
இதனையடுத்து, சிங்கப்பூரில் கோழி இறைச்சிக்கான தேவை அதிகரித்துள்ளது.
பிடோக், கிம் மோ, பீஷான், மெக்பர்சன் ஆகிய வட்டாரங்களில் உள்ள ஈரச்சந்தைகளில் காலை 8 மணியிலிருந்து 9.30 மணிக்குள்ளாகவே கோழிகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்ததாக கோழிக் கடைக்காரர்கள் கூறினர். இது வழக்கத்தைவிட மூன்று, நான்கு மணி நேரம் குறைவு.
"இன்று வேலையில் மிகவும் பரபரப்பாக இருந்தேன். ஒரு மடக்குத் தண்ணீர்கூட குடிக்கவில்லை," என்றார் 216, பிடோக் நார்த் ஈரச் சந்தையில் செயல்படும் சாப் எங் ஹுவாட் கோழி இறைச்சிக் கடையின் உரிமையாளர் டான் மெய் இன், 50.
வாடிக்கையாளர்கள் இரண்டு முதல் நான்கு கோழிகளை வாங்கிச் சென்றதாக திருவாட்டி டான் சொன்னார்.
வாடிக்கையாளர் ஒருவர் கிட்டத்தட்ட 300 வெள்ளிக்குக் கோழி இறைச்சியை வாங்கிச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், ஒருவருக்கு இத்தனை கோழிகள்தான் வாங்கலாம் எனக் கட்டுப்பாடு விதிக்கும் திட்டமில்லை என்று கடைக்காரர்கள் பலரும் சொன்னதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.
இதேபோல, பல பேரங்காடிகளிலும் நேற்றுக் காலையில் புதிய கோழிகள் விறுவிறுவென விற்றுத் தீர்ந்தன.
பிடோக் வட்டாரத்தில் உள்ள ஷெங் சியோங், ஃபேர்பிரைஸ், ஜயன்ட் பேரங்காடிகளில் காலை 9 மணிக்கு முன்பாகவே புதிய கோழிகள் விற்கப்பட்டுவிட்டன. உறைய வைக்கப்பட்ட கோழி இறைச்சி மட்டுமே அங்கு இருந்ததைக் காண முடிந்தது.
வரும் வாரங்களில் உறைய வைக்கப்பட்ட கோழி இறைச்சியின் விலையும் உயரலாம் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கிடைக்காமல் போய்விடுமோ என அச்சப்பட்டு, தாம் கோழிகளை வாங்கிக் குவிக்கப்போவதில்லை என்றார் திரு லிம் ஹோங் யி, 70.
"புதிதாக வேண்டும் என்பதால்தான் ஈரச்சந்தைக்கு வந்து கோழி வாங்குகிறோம். அப்படி இருக்க, கோழிகளை வாங்கி குளிர்பதனப் பெட்டியின் உறைகலனில் அடுக்குவதால் என்ன பயன்?," என்று கேட்டார் ஓய்வுபெற்ற கடை நிர்வாகியான திரு லிம்.