வங்கிப் பரிவர்த்தனை தொடர்பில் கடந்த ஒரு மாதமாக மோசடிக்காரர்கள் விரித்த வலையில், குறைந்தது 28 பேர் சிக்கியிருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஏறத்தாழ $114,000 இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள் ஆகியவற்றின் மூலம் வங்கிப் பணியாளர்கள்போல் மோசடிப் பேர்வழிகள் பாசாங்கு செய்து, தாங்கள் குறிவைத்தோரது ரகசியத் தகவல்களைப் பெற்றதாகவும் இந்தச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வங்கிக் கணக்கில் காணப்படும் பரிவர்த்தனைகளைச் சரிபார்ப்பதற்காக இணையவழி வங்கிப் பரிவர்த்தனைக்குரிய பயனாளர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றை மோசடிக்காரர் கேட்பது, அந்த மோசடிச் சம்பவங்களில் ஒரு வகையாகும். வேறு வங்கிக்குப் பெருமளவில் பணத்தை அனுப்பியது தொடர்பில் விசாரிக்கப்படுவதாகவும் மோசடிக்காரர்கள் கூறுவர்.
முக்கியத் தகவல்களை மோசடிக்காரர்களிடம் அளித்ததை அடுத்து, கைபேசிக்கு அனுப்பப்படும் 'ஓடிபி', அதாவது ஒருமுறை பயன்பாட்டுக்குரிய கடவு எண்ணை மோசடிக்காரர்கள் கோருவர்.
வழக்கத்திற்கு மாறான பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டதால் பற்று அட்டை அல்லது கடன் அட்டையின் பயன்பாடு முடக்கப்பட்டதாகவும் ஒரு சிலருக்குக் குறுந்தகவல்கள் வந்துள்ளன. வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாகவும் சிலருக்குக் குறுந்தகவல் கிடைத்துள்ளது. இத்தகைய குறுந்தகவல்களில் உள்ள இணைப்புகளை 'கிளிக்' செய்வோர், போலியான வங்கிப் பரிவர்த்தனை இணையப்பக்கத்திற்குச் செல்வர். அதில் தங்களின் பயனாளர் பெயரையும் கடவுச்சொல்லையும் உள்ளீடு செய்ததை அடுத்து மற்றொரு போலி இணையப்பக்கத்தைக் காண்பர். கைபேசிக்கு வந்த 'ஓடிபி'யை அதில் உள்ளீடு செய்யுமாறு கேட்கப்படும்.
வங்கிகள் தங்களின் இணையப்பக்கங்களுக்கான இணைப்புகளை, குறுந்தகவல்வழி வழங்குவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.