மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மொத்தம் 277 பேர் விசாரிக்கப்பட்டு வருவதாக சிங்கப்பூர் காவல் துறையினர் நேற்று தெரிவித்தனர். 767க்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்களில் இவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
வங்கி தொடர்பான மோசடிகள், இணையவழி காதல் தொடர்பான மோசடிகள், வர்த்தக மின்னஞ்சல் தொடர்பான ஆள்மாறாட்ட மோசடிகள், அரசாங்க அதிகாரி போல் பாசாங்கு செய்த மோசடிகள், இணைய வர்த்தக மோசடிகள், முதலீட்டு மோசடிகள், வேலை மோசடிகள், கடன் தருவது தொடர்பான மோசடிகள் போன்ற பலதரப்பட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த தொகை $5.8 மில்லியன் என்று கூறப்படுகிறது.
சந்தேக நபர்களின் வயது 16க்கும் 78க்கும் இடைப்பட்டது என்றும் அவர்கள் மோசடிக்காரர்கள் அல்லது வேறொருவர் சார்பில் பணத்தைக் கள்ளத்தனமாக அபகரித்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளும் காவல் துறையின் ஏழு நிலப் பிரிவுகளின் அதிகாரிகளும் இணைந்து நடத்திய அமலாக்கச் சோதனையில் சந்தேக நபர்கள் சிக்கினர்.
சந்தேக நபர்களில் 197 பேர் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஏமாற்றுதல், பண மோசடி, உரிமமின்றி கட்டணச் சேவை வழங்குதல் போன்றவற்றின் தொடர்பில் இவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் தங்களின் வங்கிக் கணக்கையோ கைபேசி தொடர்பு எண்ணையோ வேறொருவர் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு கோரினால் அதற்கு இடங்கொடுக்க வேண்டாம் என்றும் குற்றச்செயல் நிகழ்ந்தால் பொதுமக்களும் அதற்கு உடந்தையாகக் கருதப்படுவர் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் எச்சரிக்கை
இதற்கிடையே, சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் அதிகாரிகளாக பாசாங்கு செய்யும் மோசடிக்காரர்கள் தொடர்பில் ஆணையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசடிக்காரர்கள் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண் வழியாக வரி செலுத்துபவரின் வங்கிக்கணக்கு விவரங்கள், 'ஓடிபி' போன்ற தனிநபர் தகவல்களைக் கோரி வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.