முரசொலி
உலகளாவிய பல பிரச்சினைகளால் பணவீக்கம், அதாவது விலைவாசி, தாறுமாறாக அதிகரித்துவிட்டது. சிங்கப்பூரைப் பொறுத்தவரை கடந்த மே மாத நிலவரப்படி பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலைவாசி 5.6% அதிகரித்துள்ளது. $100 செலவிட்ட மக்கள், இப்போது அதே பொருள், சேவையைப்பெற $105.60 செலவிட வேண்டிய நிலை.
பணவீக்கம் விரைவில் இறங்குமுகமாகத் திரும்பும் என்பதற்கான உடனடி அறிகுறியும் தெரிந்தபாடில்லை. இது ஒருபுறம் இருக்க, உலகப் பொருளியல் நிலவரங்கள் நிச்சயமில்லாத நிலையிலே தொடர்கின்றன. 2023ல் பொருளியல் மந்தத்துக்கும் வாய்ப்பு உள்ளதாக அபாயச் சங்கு ஊதப்படுகிறது.
விலைவாசி கூடும் சூழலில் சிங்கப்பூரில் எதிர்கால அரசாங்கச் செலவினங்கள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. அரசாங்கத்துக்கு அதிக பணம் தேவைப்படக்கூடிய நிலை இருக்கிறது. வருங்கால செலவினங்களைச் சமாளிக்கும் ஏற்பாடாக ஜிஎஸ்டி எனப்படும் பொருள், சேவை வரியை உயர்த்த திட்டம் உள்ளது.
அதேவேளையில், விலைவாசி உயர்வதால் மக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களைக் குறைக்க வேண்டும். இதைக் கருத்தில்கொண்டே நன்கு செம்மையாக அளந்து பார்த்து எல்லாவற்றையும் எடைபோட்டு சூழ்நிலைக்கு ஏற்ற புதிய 1.5% பில்லியன் நிவாரணத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பமாக இருந்தாலும் நிறுவனங்களாக இருந்தாலும் யார் யாருக்கு எந்த அளவுக்கு உதவி தேவைப்படும் என்பதை மிகக் கவனமாக மதிப்பிட்டு துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்கடந்த செவ்வாய்க்கிழமை அந்த நிவாரண திட்டத்தை அறிவித்தார். அத்திட்டம் ஏற்கெனவே நடப்பில் உள்ள பல நிவாரண உதவிகளுக்கு உறுதுணையாக இருந்து மக்களின், நிறுவனங்களின் சுமையை ஓரளவுக்குக் குறைக்கும் என நம்பலாம்.
குடும்பங்களுக்கு நேரடியாக பணம் தருவது, பயனீட்டுத் தள்ளுபடிகளை வழங்குவது, நிறுவனங்களுக்குப் பலவித உதவிகளைச் செய்வது எல்லாம் புதிய நிவாரண திட்டத்தில் அடங்கும்.
குடும்பங்களைப் பொறுத்தவரை குறைந்த வருமானம் உள்ளவை அதிக உதவியைப் பெறும். எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்போருக்கும் திட்டம் மிகவும் உறுதுணையாக இருக்கும்.
ஜிஎஸ்டி ரொக்கப் பற்றுச்சீட்டு பெறுகின்ற, விலைவாசி உயர்வு காரணமாக அதிகம் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளவர்களுக்குக் கூடுதலாக $300 பணம் கொடுக்கப்படும். எரிபொருளுக்கு ஆகும் கூடுதல் செலவை ஈடுசெய்யும் வகையில் டாக்சி, தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்கள் $150 தொகை பெறுவார்கள்.
கொம்கேர் உதவித் திட்டத்தில் பலன் பெறுகின்ற ஒரு நபரைக் கொண்ட குடும்பங்களுக்கு மாதம் $40 கிடைக்கும். இதேபோல் நிறுவனங்களுக்கும் தோதான பொருத்தமான போதிய அளவுக்கு நிவா ரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
'படிப்படியான சம்பள உயர்வு பற்றுத் திட்டத்தின்கீழ்' இடம்பெறும் சம்பள உயர்வில் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். தகுதி உள்ள முதிர்ச்சிநிலை ஊழியர்களை முதலாளிகள் வேலையில் அமர்த்த ஆதரவு தரும் 'வேலை உருவாக்கத் திற்கான ஊக்குவிப்புத் திட்டம்' ஆறு மாதத்துக்கு நீட்டிக்கப்படும். அதிக பாதிப்புக்கு ஆளாகும் இதர ஊழியர்களுக்கும் உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது.
இவை ஒருபுறம் இருக்கட்டும். எரிபொருள் செலவு அதிகரித்து இருப்பதால் உணவு சேவைத் துறை, உணவு தயாரிப்புத்துறை, சில்லறை வர்த்தகத்துறை போன்ற துறைகளில் அதன் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கிறது.
இந்தத் துறைகளைச் சேர்ந்த சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின்கீழ் எரிசக்தி சிக்கனத் தீர்வுகளைக் கைகொள்ள அந்த நிறுவனங்களுக்கு மானியம் உண்டு.
கொரோனா தலைதூக்கி உலகை, பொருளியலை நாசப்படுத்த தொடங்கிய பிறகு அரசாங்கம் பலமுறை பல விதங்களில் நிவாரண உதவிகளை வழங்கி பொதுமக்களுக்கு உதவி வருகிறது.
தேவைக்கு ஏற்ப போதிய அளவுக்கு அப்போதைக்கு அப்போது வழங்கப்பட்டு வந்துள்ளன.
கொரோனா பாதிப்புகளில் இருந்து உலகப் பொருளியல் தலைதூக்கி மீண்டுவர தொடங்கிய நிலையில், உக்ரேன் போர் உள்ளிட்ட பிரச்சினைகளால் எரிபொருள், உணவுப் பொருள் விலைகள் வரலாறு காரணாத அளவுக்கு உயர்ந்துவிட்டன.
இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள சிங்கப்பூரில் அவற்றின் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது.
எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் விலைகளைக் கட்டுப்படுத்த முயலாமல் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவை, உதவிகளை வழங்குகிறது. இதுவே சிறப்பான அணுகுமுறையாக இருக்கும். காரணம் விலைகளைக் கட்டுப்படுத்த முயன்றால் விலைவாசிப் போக்கு தெரியாமல்போய்விடும். பரந்த அடிப்படையிலான வருமான ஆதரவு அணுகுமுறையைக் கைகொண்டால் அது பணவீக்கத்துக்கான நெருக்குதலை ஏற்படுத்தி விடும்.
அரசுக்குச் செலவினங்கள் அதிகரிக்கும் சூழலில் அத்தகைய ஓர் அணுகுமுறை ஏற்புடையதாகவும் இராது. ஆகையால்தான் யார் யாருக்குப் பாதிப்பு அதிகமோ அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட அரசு கச்சிதமான திட்டத்தை அறிவித்துள்ளது.
நிலைமை இன்னமும் மோசமானால் அடுத்த சுற்று ஆதரவும் உதவிகளும் இடம்பெறும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிரமமான, சவாலான காலகட்டத்தில் வழக்கம்போல் அரசாங்கம் தான் செய்யவேண்டியவற்றைப் சூழ்நிலைக்கு ஏற்ப செய்து பணவீக்க வலியைக் குறைக்க வகை செய்துள்ளது. அது மட்டும் போதாது.
அந்த வலி தாங்க முடியாத அளவுக்கு அதிக மாவதைத் தடுத்து, அதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு நிறுவனங்கள், குடும்பங்கள் பொதுமக்களுக்கு அதிகம் என்பதை மறந்துவிடக் கூடாது. விலைவாசி உயர்வு, வட்டி உயர்வு காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கூடுமானவரை குறைத்துக்கொள்ள அவர்கள் முயலவேண்டும்.
அனாவசியமாக செலவு செய்வது, மின்சாரம், தண்ணீரை அளவுக்கு அதிகமாக பொறுப்பு இன்றி பயன்படுத்துவது போன்றவற்றைக் குடும்பங்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்.
நிறுவனங்கள் தாங்கள் பொருள், சேவைகளைப் பெறும் ஏற்பாடுகளைப் பலமுனைப்படுத்திக்கொள்ள வேண்டும்; இயன்றபோது நீண்டகால உடன்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும்; எதிர்கால விலை உயர்வுகளில் இருந்து தப்பிக்க புத்தாக்கங்களைக் கைகொள்ளவேண்டும்.